சிங்கப்பூரர்களதும் அவர்களுடைய பிள்ளைகளதும் வாழ்க்கைத் தரம் படிப்படியாக மேம்படும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் உறுதி அளித்துள்ளார்.
சிங்கப்பூரின் வளர்ச்சியின் மூலம் கிடைக்கும் பலன் அனைத்துப் பிரிவினரையும் சென்றடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமத்துவமின்மையைக் குறைக்கவும் சமூக அமைப்பில் படிப்படியாக மேம்படுவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்காக முதலீடு செய்யும்போது அடிக்கடி செலவுகள் ஏற்படுவது இயல்பு என்று
அமைச்சர் கூறினார்.
செலவுகள் அதிகரிக்கும்போது அதைச் சமாளிக்க சிங்கப்பூர் அதன் வருமான மீள்திறனைப் பலப்படுத்த வேண்டும் என்று திரு வோங் தெரிவித்தார்.
"சமத்துவமின்மையைக் குறைக்க நாம் தொடர்ந்து நட
வடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், அனைத்துப் பிரிவினரும் சமூக அமைப்பில் படிப்படியாக முன்னேறும் நிலையை மேம்படுத்த வேண்டும். இந்த முயற்சிகளுக்குத் தொடர்ந்து நிதி தேவைப்படும்.
"இவற்றுக்குச் செலவு செய்ய நிதி அமைச்சு ஒருபோதும் தயக்கம் காட்டாது. நமது மக்களின் முன்னேற்றத்துக்கும் நல்வாழ்வுக்கும் தொடர்ந்து முதலீடு செய்யப்படும். இது அரசாங்கம் சிங்கப்பூரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கொண்டுள்ள கடப்பாட்டைக்
காட்டுகிறது," என்றார் திரு வோங்.
கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 35வது சிங்கப்பூர் பொருளியல் கலந்துரையாடலில் சிங்கப்பூர் கையாள இருக்கும் நிதி தொடர்பான உத்திமுறைகளை மேற்கோள்காட்டிய திரு வோங், சிங்கப்பூரர்களுக்கு இந்த உத்தரவாதத்தைக் கொடுத்தார்.
சிங்கப்பூர் எதிர்நோக்கும் முக்கிய பொருளியல் விவகாரங்கள் குறித்து தனியார் துறையைச் சேர்ந்த மூத்த பொருளியல் நிபுணர்கள், கல்விமான்கள், வர்த்தகத் தலைவர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் ஆகியோர் நிகழ்ச்சி யில் ஒன்றிணைந்து கலந்துரையாடினர்.
நிதி தொடர்பான கொள்கைகளை மிகுந்த கவனத்துடனும் சிறப்பாகவும் கையாள்வதில் சிங்கப்பூர் இதுவரை வெற்றி கண்டிருப்பதை திரு வோங் சுட்டினார்.
ஆனால் மேலும் பல சவால்கள் காத்திருப்பதாக அவர் கூறினார். மூன்று சவால்களை மேற்கோள் காட்டிய திரு வோங், நாட்டின் நிதி தொடர்பான
உத்திமுறைகளின் பாதையை அவை நிர்ணயிக்கும் எனத் தெரிவித்தார்.
குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சாதகநிலை அதிகரித்து அவர்களது
வாழ்க்கைத் தரம் மட்டுமே உயரும்போது சமூக ஒருமைப்பாடு நிலை
குலையும் அபாயம் இருப்பதாக
அமைச்சர் வோங் எச்சரித்தார்.
வேகமாக மூப்படையும் மக்கள்
தொகையும் கடுமையான சவாலை விடுப்பதாக திரு வோங் குறிப்பிட்டார்.
மூப்படையும் மக்கள்தொகை காரணமாக ஊழியரணி சுருங்குவதாகவும் சுகாதாரப் பராமரிப்புக்கும் மூத்தோர் பராமரிப்புக்கும் தேவை அதிகரிப்பதாகவும் அவர் அக்கறை தெரிவித்தார்.
மேலும், பருவநிலை மாற்றமும் முகத்துக்கு நேராக நின்று மிரட்டல் விடுப்பதாக திரு வோங் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மிக மோசமான பாதிப்புகளைப் பல ஆண்டுகள் கழித்து உணர முடியும் என்றபோதிலும் இதற்குத் தீர்வு காண உடனடி நடவடிக்கை மிகவும்
அவசியம் என்றார் அவர்.
மற்ற நாடுகளைப் போலவே சமத்துவமின்மை, மக்கள்தொகை போன்ற சவால்களை எதிர்கொள்ள சிங்கப்பூருக்குக் கூடுதல் நிதி வளங்கள் தேவைப்படும் என்று அமைச்சர் வோங் கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.
மேலும் நியாயமான சமுதாயத்தை அமைப்பதே இலக்கு என்று தெரிவித்த அமைச்சர் வோங், ஒவ்வொரு பிள்ளையின் கனவும் நனவாகக்கூடிய, ஒவ்வோர் ஊழியரும் கௌரவத்துடன் வாழக்கூடிய, இடமாக சிங்கப்பூர் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
சமூகப் பின்னணி, வயது, இனம், சமயம் எதுவாக இருந்தாலும் அவர்களை ஏற்கும் சமுதாயத்தை உருவாக்குவதே இலக்கு என்றார் அமைச்சர் வோங்.

