நவராத்திரி விழாவின் பத்தாவது நாளான விஜயதசமியன்று தொடங்கும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. குறிப்பாக, குழந்தைகளின் கல்விப் பாதையைத் தொடங்கு வதற்கு விஜயதசமி சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.
பொதுவாக, கோயில்களில் திருஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
குழந்தைகளின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களது விரல்களால் நெல்லில் அல்லது அரிசியில் பெற்றோர் எழுத வைப்பார்கள்.
வீடுகளிலும் இந்த 'முதல் எழுத்து' நிகழ்வு நடைபெறுகிறது. நெல்லுக்குப் பதிலாக பென்சில், தாள் பயன்படுத்தும் முறைக்குப் பலர் மாறிவிட்டனர்.
இந்தியாவில் மட்டுமில்லாது, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் இந்துக்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியைத் தொடங்கிவைக்கும் இந்த சடங்கிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர். விஜயதசமி நாளான நேற்றைய தினத்தன்று குழந்தைகள் பலர் இந்த 'முதல் எழுத்து' நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஏட்டுக்கல்வியைப் போன்று, கலைகளையும் ஏனைய வித்தைகளையும் இந்த நாளில் தொடங்குவது இந்துக்களின் வழமை.

