ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் அண்மையில் நடந்தேறிய உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் (பாராலிம்பிக்) விளையாட்டுகளில் இரு தங்கப் பதக்கங்களை வென்றிருந்த சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூவுக்கு $800,000 பரிசுத் தொகை கிடைத்துள்ளது.
50 மீட்டர், 100 மீட்டர் மல்லாந்த நீச்சல் பாணி போட்டிகளில் அவர் தங்கம் வென்றிருந்தார்.
பாராலிம்பிக் விளையாட்டுகளில் 29 வயது யிப் வென்றிருந்த ஒவ்வொரு தங்கத்திற்கும் அவருக்கு $200,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்பவருக்கு வழங்கப்படும் தொகையில் ஐந்தில் ஒரு பங்காகும்.
ஒலிம்பிக் தங்கத்திற்கும் பாராலிம்பிக் தங்கத்திற்கும் இடையிலான பரிசுத் தொகையில் நிலவும் வேறுபாட்டைக் குறைக்க வேண்டும் என ஏற்கெனவே விவாதம் எழுந்தது.
இந்நிலையில், விளையாட்டு வீரர்கள் சாதனை விருது நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை (அக்டோபர் 16) நடைபெற்றது. விருது வழங்கும் இந்தத் திட்டத்தில் டிபிஎஸ் வங்கி ஆதரவாளராக சேர்ந்துள்ளது. இந்த அறிவிப்பு, பாராலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.
விளையாட்டு வீரர்கள் சாதனை விருதுத் திட்டத்திற்குப் பந்தயப் பிடிப்புக் கழகம் முதன்மை ஆதரவாளராக உள்ளது. அதன் பங்களிப்புக்கு இனி டிபிஎஸ் வங்கியும் வெள்ளிக்கு வெள்ளி நிகராக ஆதரவளிக்கும்.
இதனால், இன்றைய விருது நிகழ்ச்சியில் வீராங்கனை யிப்பிற்கு $800,000 வழங்கப்பட்டது.