அமெரிக்கா முழுமையாகத் தடுப்பூசி போட்டவர்களுக்கு தனது நில, வான் எல்லைகளைத் திறந்துவிடுகிறது. முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினருக்கான கட்டுப்பாடுகள் நவம்பர் 8ஆம் தேதியிலிருந்து விலக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகை அறிவித்தது.
கொள்ளைநோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் கடந்த ஆண்டு மார்ச் முதல் நில எல்லைகளில் அத்தியாவசியமற்ற பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
முதற்கட்டமாக, அமெரிக்கர் அல்லாத குடிமக்கள் சீனாவிலிருந்து விமானம் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய 2020 ஜனவரியில் தடை விதிக்கப்பட்டது.
அப்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்தத் தடையை பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பின்னர் விரிவுபடுத்தினார். அந்தத் தடைகள் எப்போது, எவ்வாறு விலக்கப்படும் என்பதற்கான எந்தவிதத் தெளிவுமின்றி அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது அதுபோன்ற கட்டுப்பாடுகள் விலக்கப்படும் என்று வெளியிடப்பட்டு இருக்கும் அறிவிப்பை அமெரிக்க நட்பு நாடுகள் பல வரவேற்றுள்ளன.
இதுவரை நடப்பிலுள்ள கட்டுப் பாடுகளால் உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரம் வெளிநாட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள தங்களது குடும்ப, வர்த்தக உறவுகளைத் தொடரமுடியாத தவிப்பில் அவர்கள் உள்ளனர்.
கட்டுப்பாடு நீக்கத்தின் முதற்கட்டமாக நில எல்லைகள் மற்றும் கனடா, மெக்ஸிகோவிலிருந்து வந்து செல்லும் பயணக் கப்பல்கள் போன்றவற்றுக்கான தடை விலக்கப்படும் என கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா அறிவித்தது.
முழுமையாகத் தடுப்பூசி போட்ட வெளிநாட்டினர் நவம்பர் தொடக்கப் பகுதியில் இந்த சுதந்திரத்தை அனுபவிக்கலாம் என்றது அது.
புதிய நடைமுறைகளின்கீழ், அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றுகளைக் காட்ட வேண்டும். மேலும் கொவிட்-19 தொற்று இல்லை என்பதற்கான ஆக அண்மைய பரிசோதனைச் சான்றுகளையும் சமர்ப்பிப்பது அவசியம்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்திய நாட்டினரும் இந்தக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி அமெரிக்கா செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.