கொவிட்-19 தொடர்பில் மேலும் ஒன்பது பேர் உயிரிழந்துவிட்டனர். இதனுடன், சிங்கப்பூரில் கொவிட்-19 மரண எண்ணிக்கை 224ஆக உயர்ந்துள்ளது.
இறந்தோரில் ஆடவர் நால்வர் என்றும் பெண்கள் ஐவர் என்றும் சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது. சிங்கப்பூரர்களான அவர்கள் 60 முதல் 89 வயதிற்குட்பட்டவர்கள்.
அவர்களில் இருவர் முழுமையாகவும் இருவர் ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தனர். எஞ்சிய ஐவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. தடுப்பூசி போடாத ஒருவரைத் தவிர மற்ற அனைவர்க்கும் வேறு உடல்நலக் குறைபாடுகளும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் தொடர்ந்து 27வது நாளாக கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
கடந்த 28 நாள்களில் கொரோனா தொற்றால் மாண்டோரில் 26.3 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தனர்.
இதனிடையே, நேற்று புதிதாக 3,348 பேர்க்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 2,688 பேர் சமூகத்தில் இருப்பவர்கள், 656 பேர் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். வெளிநாடுகளில் இருந்த வந்தோரில் நால்வர்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
உள்ளூரில் பாதிக்கப்பட்டோரில் 475 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.