தெம்பனிஸ், பொங்கோல் போன்ற குடியிருப்புப் பேட்டைகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சம் மேலும் ஏழு தாதிமை இல்லங்களைக் கட்டுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
மக்கள்தொகை மூப்படைந்து வருவதைக் கருத்தில்கொண்டு முதியோர் பராமரிப்பு ஆதரவு ஏற்பாடுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஓர் அங்கமாக இந்தத் திட்டம் இடம்பெறுகிறது என்று சுகாதார அமைச்சு கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 2016 முதல் சென்ற ஆண்டுவரை எட்டு தாதிமை இல்லங்கள் அமைக்கப்பட்டன. 2015ல் இத்தகைய 69 தாதிமை இல்லங்கள் செயல்பட்டன.
புதிய தாதிமை இல்லங்கள் கூடுமான வரை குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்படும். இதனால் குடும்பத்தினர் வசதியாக முதியோரை சென்று பார்த்து அவர்களைப் பராமரிக்க உதவலாம் என்று அமைச்சு தெரிவித்தது.
கடந்த 2015க்கும் சென்ற ஆண்டுக்கும் இடையில் 4,000 தாதிமை இல்லப் படுக்கைகளும் 4,600 பகல்நேர பராமரிப்பு, 3,100 இல்லப் பராமரிப்புப் படுக்கை வசதிகளும் உருவாக்கப்பட்டன.
இப்போது சிங்கப்பூரில் 16,221 தாதிமை இல்லப் படுக்கைகள் உள்ளன என்பது அமைச்சின் இணையப் பக்கம் மூலம் தெரியவருகிறது. புதிய இல்லங்களுக்கான நில ஆய்வுகளை அமைச்சு நடத்தி வருகிறது. புதிய இல்லங்களில் ஒன்று, பிடாடாரி பகுதியில் ஒரு பலதுறை மருந்தகத்துக்குப் பக்கத்தில் அமையும்.
தெம்பனிஸ் சவுத், பொங்கோல் ஃபீல்டு, தஞ்சோங் காத்தோங் ரோடு, ஹவ்காங் அவென்யூ 3, ஈசூன் அவென்யூ 6, அல்ஜுனிட் வாக், யூனோசில் உள்ள சின் செங் அவென்யூ ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, தாதிமை இல்லங்களின் எண்ணிக்கையைத் தான் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் மாறும் தேவைகளுக்கும் போக்குகளுக்கும் ஏற்ப திட்டங்களைச் சரிப்படுத்தப் போவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கு அப்பாலும் பராமரிப்புச் சேவைகளின் தரத்தையும் பாணிகளையும் மேம்படுத்துவதில் தான் ஒருமித்த கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.
சிங்கப்பூரில் மக்கள்தொகை தொடர்ந்து மூப்படைந்து வருகிறது. சென்ற ஆண்டில் மொத்த மக்களில் 15.2 விழுக்காட்டினருக்கு வயது 65 மற்றும் அதற்கும் அதிகம் என்பது 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.
ஏறத்தாழ 97,600 சிங்கப்பூரர்கள் பார்ப்பது, கேட்பது, நடமாடுவது, சுயமாக தன்னைக் கவனித்துக்கொள்வது, நினைவாற்றல், தொடர்புகொள்வது முதலானவற்றில் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள் என்பதும் அந்தக் கணக்கெடுப்பு மூலம் தெரியவந்தது.