லிட்டில் இந்தியாவில் தீபாவளிக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
கேம்பல் லேனும் சிராங்கூன் ரோடும் சந்திக்கும் இடத்தில் உள்ள பிரபலமான நடையர் கடப்பிடம், அக்டோபர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் விடிகாலை 1 மணி வரையில் செயல்படாது என்று சிங்கப்பூர் பயணத் துறைக் கழகம் தெரிவித்தது.
தீபாவளிக்கு முதல் நாளான நவம்பர் 3ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து அடுத்த நாள் அதிகாலை 2 மணி வரை, அந்தச் சந்திப்பில் நடையர்கள் சாலையைக் குறுக்கே கடக்க முடியாது.
சுங்காய் ரோடு, டன்லப் ஸ்திரீட் ஆகியவற்றில் செயல்படும் இதர இரண்டு சாலை கடப்பிடங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பொதுமக்கள் திருப்பிவிடப்படுவார்கள் என்றும் கழகம் கூறியது. இந்த ஏற்பாட்டின் மூலம் ஒரே இடத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் கூடாமல் கூட்டத்தைப் பரவலாக்க முடியும்.
லிட்டில் இந்தியாவில் செயல்படும் கடைகளும் நிறுவனங்களும் மக்கள் நடந்து செல்வதற்கான வழிகளில் பொருட்களை வைத்து பாதையில் நெரிசலை ஏற்படுத்தாமல் இருப்பதை அந்தக் கடைகளுடன் சேர்ந்து செயல்பட்டு கழகம் உறுதிப்படுத்தும்.
தீபாவளி நெருங்க நெருங்க லிட்டில் இந்தியாவில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டும் இரவுநேரச் சந்தைகள் இருக்காது.
வாடிக்கையாளர்கள் வெவ்வேறு நேரங்களில் பொருள்வாங்க வசதியாக சில கடைகள் தங்கள் வர்த்தக நேரத்தை நீட்டிப்பதாகத் தெரிவித்தன.
பல்சுவை உணவுகள், பாரம்பரிய பயணங்கள், சமையல் திறன் விளக்கக்காட்சிகள், பொக்கிஷ வேட்டைகள், டிக்டாக் நடன சவால் போன்ற போட்டிகளைப் பார்வையாளர்கள் ரசித்து மகிழமுடியும்.
இதனிடையே லிட்டில் இந்தியாவில் இடம்பெற உள்ள கூட்ட நெரிசல் தவிர்ப்பு ஏற்பாடுகள் பற்றி கருத்து கூறிய ஹரி ஓம் தையல் கடை உரிமையாளர் திருமதி ஜானகி மஹேந்திரன், 63, இந்த மாற்றம் தங்கள் தையல் கடையை அதிகம் பாதிக்காது என்றார்.
"கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம். தீபாவளி வரும், போகும். ஆனால் நமது உடல் நலத்தைக் காப்பது முக்கியம்," என்று அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், காலில் அடிபட்டு நடப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் திரு சுப்பையா முருகன், 75, என்ற முதியவர், டன்லப் ஸ்திரீட் வரை நடந்து செல்வது சிரமமானதாக இருக்கும் என்றார்.
கூடுதல் செய்தி: இந்து இளங்கோவன்