அமெரிக்காவில் ஃபிலடெல்ஃபியா அருகே, கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில், ஓடும் ரயிலில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோதும் சக பயணிகளில் ஒருவர்கூட அவருக்கு உதவவில்லை.
அவர்கள் யாரும் 911 அவசர எண் மூலம் தொடர்புகொள்ளவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதிலாக, எட்டு நிமிடங்கள் நீடித்த அந்தக் கொடுமையைப் பயணிகளில் சிலர் கைபேசிகளில் படமெடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஃபிஸ்டன் எங்கோய், 35, என்ற ஆடவர் கைதானார். அவர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ரயில் ஓடிக்கொண்டு இருந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் அருகே அமர்ந்திருந்த எங்கோய், திடீரென்று பெண்ணின் ஆடைகளைக் கிழித்து பலாத்காரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கு முன்னதாக அந்த ஆடவர், அப்பெண்ணைச் சிலமுறை தொட முயன்றதாகவும் ஆனால் அப்பெண் ஆடவரின் கையைத் தள்ளிவிட்டு, அவரது செய்கையைத் தடுக்க முயன்றதாகவும் தென்கிழக்கு பெனிசில்வேனியா போக்குவரத்து ஆணையம் என்ற அமைப்பின் பேச்சாளரான ஆண்ட்ரு புஷ்ச் விளக்கம் அளித்தார்.
தற்செயலாக அந்த ரயில் பெட்டியில் நுழைந்த போக்குவரத்து ஆணைய அதிகாரி ஒருவர் எங்கோயை போலிசார் உதவியுடன் பிடித்துக்கொடுத்தார்.
இதுபற்றி கருத்துத் தெரிவித்த திமத்தி பெர்ன்ஹார்ட் என்ற காவல்துறை உயரதிகாரி, "அப்பெண்ணுக்கு ஒருவரும் உதவாதது மனம் வருந்தச் செய்கிறது," என்றார்.
"அந்நேரத்தில் அந்த ரயில் பெட்டியில் இருந்தவர்கள், ஏன் அந்த மாபாதகனைத் தடுக்கவில்லை, அந்தப் பெண்ணுக்கு உதவவில்லை என்பதைத் தங்களைத் தாங்களே கண்ணாடியில் பார்த்து கேட்டுக்கொள்ள வேண்டும்," என்று அவர் கோபத்தடன் கூறினார்.
உதவ முன்வராதபோதும் அந்தக்கொடுமையைப் படமெடுத்தோர்மீது குற்றவியல் வழக்கு பதிவுசெய்யப்படும் என்று திரு பெர்ன்ஹார்ட் தெரிவித்து உள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டன.

