கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) காலை கிட்டத்தட்ட 250 பயணிகள் சிங்கப்பூர் வந்துள்ளனர். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
சிங்கப்பூர் ஏர்லைன்சால் இயக்கப்படும் SQ329 விமானத்தில் நெதர்லாந்திலிருந்து ஏறக்குறை 80 பயணிகள் இன்று அதிகாலை 6.30 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கினர். ஒன்றரை மணி நேரம் கழித்து, லண்டனில் இருந்து SQ317 விமானம் 170 பயணிகளுடன் தரையிறங்கியது.
சாங்கி விமான நிலையத்தின் முனையம் 3ல் வந்திறங்கிய இந்தப் பயணிகளில் பெரும்பாலும் தனியாக அல்லது தம்பதியாக வந்திருப்பவர்கள் என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குழுவினர் அறிந்தனர்.
குறைந்தது மூன்று குடும்பங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தன. பயணிகளின் ஆசியர்களும் வெள்ளையர்களும் கலந்து காணப்பட்டனர்.
வருகையாளர் பகுதியில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் கடுமையான இருந்தன. பொதுமக்கள் அனுமதிக்கப்படாத பகுதி வழியாக பயணிகள் வழிநடத்தப்பட்டனர்.
விமான நிலையத்திலிருந்து அவர்கள் வெளியே செல்வதற்கு முன்னர், விமான நிலைய ஊழியர் அவர்களுக்கு கொவிட்-19 பல்படியத் தொடர்வினை (பிசிஆர்) சோதனையை மேற்கொண்டார்.
பயணிகளை அழைத்துச்செல்ல வந்த குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் ஒரு தனிப் பகுதியில் காத்திருந்தனர்.
வாகனம் ஓட்டி வந்தவர்கள் பயணிகளை சந்தித்த பிறகு வாகனநிறுத்துமிடத்துக்கு தனி மின்தூக்கியில் செல்ல வேண்டும். அதனை ஏனைய பொதுமக்கள் பயன்படுத்த முடியாது.
விடிஎல் திட்டத்தின் கீழ் இன்று சிங்கப்பூர் வந்த பயணிகளில் ஒருவரான திரு பால் வோல்ஹாஃப், 58, மாமியாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும், உறவினர்களைச் சந்திக்கவும் மனைவி வின்னி யியோ, 59 உடன் வந்திருப்பதாகக் கூறினார்.
“வழக்கமாக ஆண்டுதோறும் சீனப் புத்தாண்டின் போது நாங்கள் சிங்கப்பூர் வருவோம், சில சமயங்களில் மற்ற நேரங்களிலும் வரும்” என்று வங்கி ஆலோசகராகப் பணிபுரியும் திரு வோல்ஹோஃப் கூறினார்.
தொற்று பரவல் காலமாக டச்சு நாட்டவர்களாக இவர்களால் அடிக்கடி வரமுடியவில்லை. கொவிட்-19 நெருக்கடி நிலைக்கு முன்னதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவர்கள் கடைசியாக இங்கு வந்து சென்றனர்.
விடிஎல் பயணத் திட்டத்தைப் பயன்படுத்தி, அடுத்த ஆண்டு சீன புத்தாண்டின்போதுதான் சிங்கப்பூருக்கு வர திரு வோல்ஹோஃப் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது மாமியார் இறந்த செய்தி கிடைத்தவுடன் அவர்கள் உடனடியாகக் கிளம்பினர்.அவர்கள் இரண்டரை வாரங்கள் சிங்கப்பூரில் தங்கியிருப்பார்கள்.
கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எதிர்வரும் வாரங்களில் மேலும் ஒன்பது நாடுகளுக்குத் தனிமை உத்தரவின்றி சென்றுவர முடியும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் திட்டத்தின்கீழ், தற்போது (அக்டோபர் 19 முதல்), கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் சென்று வரலாம். சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் அவர்கள் இங்கு தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
சிங்கப்பூர் இதுவரை மொத்தம் 11 நாடுகளுடன் இந்த இருதரப்பு பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டுள்ளது.
நவம்பர் 15 முதல், விடிஎல் திட்டம் தென்கொரியாவுக்கும் நீட்டிக்கப்படுகிறது.