சிங்கப்பூரில் தற்போது நடப்பில் உள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகள் நவம்பர் மாதம் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் சுகாதார பராமரிப்புத் துறையின் சேவைகள் தாக்குப்பிடிக்கும் அளவைத் தாண்டும் அபாயம் இருப்பதால் இந்த நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 1,650 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளில் 90 விழுக்காட்டிற்கும் மேல் பயன்பாட்டில் உள்ளது. மேலும் 200 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளில் மூன்றில் இரண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
"சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள், மருத்துவமனைகளின் வேலைப் பளு கணிச மாக உள்ளது," என்று மெய்நிகர் தளம் வழியே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
மனிதவளத்தை அதிகரிப்பது உட்பட பல வழிகளில் மருத்துவமனைகளுக்குக் கூடுதல் ஆதரவும் வசதியும் செய்துதர தமது அமைச்சு ஏற்பாடுகளை செய்துவருவதாகக் கூறிய அவர், ஆனால் அதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்றார்.
நீட்டிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இரண்டு வாரத்திற்குப் பின்னர் மறுபரிசீலனை செய்யப் படும். அப்போது சமூக அளவில் நோய்ப் பரவல் சூழலின் நிலைமையைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் மாற்றப்படலாம்.
சமூக ஒன்றுகூடல்களுக்கு எண்ணிக்கைக் கட்டுப்பாடுகள், உணவகம், உணவங்காடிகளில் இருவர் மட்டுமே ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவது போன்ற கட்டுப்பாடுகள் தற்போது நடப்பில் உள்ளன.
"அடுத்த ஒரு மாதத்திற்கு அனைத்து கட்டுப்பாடுகளும் அப்படியே நிலையாக இருக்கவேண்டும் என்பதில்லை," என்று கொவிட்-19 கிருமித்தொற்றை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட அமைச்சுகள் நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் மற்றொருவரான நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார். சில அம்சங்களில் அரசாங்கம் நடைமுறைகளை மறு ஆய்வு செய்து அவற்றில் மாற்றங்களை முதலில் செயல்படுத்தும் என்றார் அவர்.
கட்டுப்பாடுகளின் நீட்டிப்பால் பாதிக்கப்படும் வர்த்தகங்களுக்கு ஆதரவளிக்க $640மில்லியன் ஆதரவு தொகுப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
"இந்தக் காலக்கட்டம் வரையறை இல்லாமல் நீடிக்கப்போவதில்லை," என்று கூறிய அமைச்சர் வோங், இந்த கட்டுப்பாடுகளின் தேவையைப் புரிந்து அதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
"ஒரு கட்டத்தில், இந்தத் தொற்றின் அலை உச்சத்தை அடையும். அதிக மக்களுக்குத் தொற்று ஏற்பட்டுவருவதாலும் கூடுதல் தடுப்பூசியை வரும் வாரங்களில் இன்னும் அதிகமானோர் போடுவதாலும் கிருமிக்கு எதிரான எதிர்ப்புசக்தியும் மேலோங்கி இருக்கும்," என்றார் அவர்.

