ஒவ்வொரு வீட்டிற்கும் 10 ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) கருவிகளை சிங்போஸ்ட் வழியாக சுகாதார அமைச்சு வழங்கவிருக்கிறது.
நாளை 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 1,000 அஞ்சல்காரர்கள் அவற்றை விநியோகிக்கும் பணியை மேற்கொள்வர்.
பொதுமக்களுக்குப் போதுமான ‘ஏஆர்டி’ கருவிகள் கிடைக்க ஏதுவாக, சனிக்கிழமைகளிலும் அஞ்சல்காரர்கள் அவற்றை விநியோகிக்கும் பணியில் ஈடுபடுவர்.
சனிக்கிழமைகளில் ‘ஏஆர்டி’ கருவிகளை விநியோகிக்கும் பணியை மட்டுமே அவர்கள் மேற்கொள்வர் என்று சிங்போஸ்ட் தெரிவித்துள்ளது.
வார நாள்களில், 60,000 ஏஆர்டி பரிசோதனைக் கருவித் தொகுப்புகளை விநியோகிக்க சிங்போஸ்ட் இலக்கு கொண்டுள்ளது. ஒவ்வொரு தொகுப்பிலும் ‘ஏஆர்டி’ கருவிகள் அடங்கிய இரண்டு பெட்டிகள் இருக்கும்.
சனிக்கிழமைகளில் அத்தகைய 100,000 தொகுப்புகளை விநியோகம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடுகளுக்கு ‘எஸ்டி பயோசென்சர் ஸ்டாண்டர்ட் கியூ கொவிட்-19 ஏஜி’ இல்லப் பரிசோதனைக் கருவிகள் விநியோகிக்கப்படும். இவை தென்கொரியாவில் இருந்து வரவழைக்கப்படுபவை.
இக்கருவிகள் மூலம் 15 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். பயனாளர்கள் பஞ்சு உருட்டை (Swab) ஒவ்வொரு நாசித் துவாரத்திலும் 10 முறை சுழற்றி, சளி மாதிரியைச் சேகரிக்க வேண்டும்.
‘ஏஆர்டி’ கருவிகள் இப்படி அஞ்சல்மூலம் வீடுகளுக்கு அனுப்பப்படுவது இது இரண்டாவது முறை.