இதுவரை இல்லாத வகையில், சிங்கப்பூர் கொவிட்-19 தொற்றால் நேற்று புதன்கிழமை (20-10-2021) ஒரே நாளில் 18 பேர் இறந்துவிட்டனர். அவர்கள் 55 முதல் 96 வயதிற்குட்பட்டவர்கள்.
இதனையடுத்து, கொரோனா தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 264ஆக உயர்ந்துவிட்டது.
இதற்குமுன் இம்மாதம் 14ஆம் தேதி 15 பேர் உயிரிழந்ததே ஒரு நாளில் கொரோனாவால் நிகழ்ந்த அதிகபட்ச மரணமாக இருந்தது.
நேற்று மாண்டவர்களில் ஆண்கள் 16 பேர், பெண்கள் இருவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஒன்பது பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தனர்; எட்டுப் பேர் தடுப்பூசி போடவில்லை.
தடுப்பூசி போடாத ஒருவரைத் தவிர மற்ற அனைவர்க்கும் வேறு உடல்நலக் குறைபாடுகளும் இருந்தன.
இதனிடையே, நேற்று மேலும் 3,862 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 3,221 பேர் சமூகத்தில் இருப்பவர்கள், 630 பேர் தங்குவிடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள், 11 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
இதனையடுத்து, மொத்த கொரோனா பாதிப்பு 158,587 ஆனது.
கொரோனா தொற்றுக்காக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 67 பேர் உட்பட 1,718 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 337 பேர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது.