சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக இம்மாதத்தில் இதுவரை 169 பேர் உயிரிழந்துவிட்டனர். இது, இங்கு கடந்த 18 மாதங்களில் கொரோனாவால் நிகழ்ந்த மொத்த மரணங்களைக் காட்டிலும் அதிகம்.
இது, உருமாறிய ‘டெல்டா’ கிருமியின் வீரியத்தையும் தடுப்பூசி போடாதோரிடையே அது ஏற்படுத்திவரும் தாக்கத்தையும் காட்டுகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதி சிங்கப்பூரில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு பதிவானது. அன்றைய நாளில் 75 வயது மூதாட்டி ஒருவர் கிருமித்தொற்றால் மாண்டுபோனார்.
அப்போது தொடங்கி, நேற்று புதன்கிழமை (20-10-2021) வரை கொரோனா தொற்று காரணமாக 264 பேர் மாண்டுவிட்டனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோரை ஒப்புநோக்க, தடுப்பூசி போடாதோர் கொவிட்-19 தொற்றால் உயிரிழக்க கிட்டத்தட்ட 8.5 மடங்கு அதிக வாய்ப்புள்ளது என்று இம்மாதப் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கணக்கீடுகள் குறிப்பிடுகின்றன.
ஒருமுறைகூட தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் கொரோனா தொற்றி இறந்தோர்க்கும் இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டபின் கிருமி தொற்றி மாண்டோர்க்கும் இடையிலான விகிதம் இது.
முன்னதாக, தடுப்பூசி போட்டுக்கொண்டோரைக் காட்டிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளதோர் கொரோனா தொற்றி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட அல்லது உயிரிழக்க 14 மடங்கு வாய்ப்புள்ளது என்று இம்மாதம் 2ஆம் தேதி சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்திருந்தார்.
கொரோனா தொற்றால் மாண்டோரில் நால்வரில் மூவர் ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அல்லது தடுப்பூசியே போடாதவர்கள்.
இம்மாதத்தில் உயிரிழந்த 169 பேரில் 84 பேர் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், 30 பேர் ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.