பருவநிலை மாற்றம், காட்டுவளம் இழப்பு, அளவுக்கு அதிக கட்டுமானங்கள் காரணமாக தெற்காசிய நாடுகளில் பருவநிலை பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன.
இந்தியாவிலும் நேப்பாளத்திலும் கடும் மழை காரணமாக ஏறத்தாழ 200 பேர் மாண்டுவிட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கடுமையான மழை தொடரும் என்ற முன்னுரைப்புகள் அச்சமூட்டி இருக்கின்றன. நேப்பாளத்தில் 88 பேர் மாண்டுவிட்டதாகவும் மூன்று பிள்ளைகள் உள்ளிட்ட ஆறு பேரைக் கொண்ட ஒரு குடும்பம் அப்படியே நிலச்சரிவில் புதையுண்டு போனதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இந்தியாவின் உத்தரகாண்டில் 55 பேர் மாண்டுவிட்டதாகவும் சுற்றுப் பயணிகள் 20 பேர் உள்ளிட்ட பலரையும் காணவில்லை என்றும் மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த மாநிலத்தின் பேரிடர் மீட்புத் துறை செயலாளர் எஸ் முருகேசன் தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தில் ஐவர் கொல்லப்பட்டனர். டார்ஜிலிங்கில் ஏறத்தாழ 400 வீடுகள் இடிந்துவிட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான சுற்றுப்பயணிகள் மாட்டிக்கொண்டுள்ளனர். கேரளாவில் 42 பேர் மாண்டுவிட்டனர் என்று அதிகாரிகள் கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.