மருத்துவமனைகளுக்கும் முதியோர் தங்கி சிகிச்சை பெறும் பராமரிப்பு இல்லங்களுக்கும் மக்கள் நவம்பர் 21ஆம் தேதி வரை நேரடியாகச் சென்றுவர இயலாது என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கவும் முதியவர்களை கொவிட்-19 தொற்றில் இருந்து காக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சு விளக்கியது.
மருத்துவமனைகளுக்கு மக்கள் நேரடியாகச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை அக்டோபர் 23ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது.
பராமரிப்பு இல்லங்களுக்கு வரும் ஞாயிறுவரை நேரடி வருகைக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தடை இப்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் நவம்பர் 21ஆம் தேதிவரை ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு இடம்பெறுகிறது.
கடந்த இரண்டு வார காலமாகவே சமூகத்தில் கொரோனா தொற்று கூடியதன் விளைவாக மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று அமைச்சு தெரிவித்தது.
மருத்துவமனைகள், முதியோர் பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களிடையே புதிய கொவிட்-19 தொற்றுக் குழுமங்களும் தலைகாட்டி இருக்கின்றன.
பெரியளவில் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் பூஸ்டர் தடுப்பூசி இயக்கம் முடுக்கிவிடப்பட்டு உள்ளது என்றும் அமைச்சு தெரிவித்தது.
மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருவோரைக் காண ஐந்து பேர்வரை அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நேரத்தில் இருவருக்கு அனுமதி இருக்கும்.
அனுமதிக்கப்படும் அனைவருக்கும் தொற்று இல்லை என்பது 24 மணி நேரம் முன்னதாக எடுக்கப்பட்ட பரிசோதனை மூலம் தெரியவர வேண்டும்.
அனைவரும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.
நேரடியாக மருத்துவமனைகளுக்கும் பராமரிப்பு இல்லங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும் தொலைபேசி அல்லது காணொளி வழி உரியவருடன் பேசவும் அவர் பற்றி தகவல் அறியவும் சேவை வழங்கப்படும்.