கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 16 பேர் சிங்கப்பூரில் நேற்று வியாழக்கிழமை (21-10-2021) உயிரிழந்துவிட்டனர். இதனால், மரண எண்ணிக்கை 280 ஆனது.
இறந்தவர்களில் ஆண்கள் 12 பேர், பெண்கள் நால்வர் என்றும் அவர்கள் 61 முதல் 93 வயதிற்குட்பட்டவர்கள் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அந்த 12 ஆண்களில் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் 11 பேர். எஞ்சிய ஒருவர் மலேசியாவைச் சேர்ந்த வேலை அனுமதிச்சீட்டு ஊழியர். பெண்கள் நால்வரும் சிங்கப்பூரர்கள்.
மாண்டோரில் எழுவர் முழுமையாகவும் ஒருவர் முதல் தவணை மட்டும் தடுப்பூசி போட்டிருந்தனர். மற்ற எட்டுப் பேரும் தடுப்பூசி போடவில்லை.
தடுப்பூசி போட்ட ஒருவரைத் தவிர மற்ற அனைவர்க்கும் வேறு உடல்நலப் பிரச்சினைகளும் இருந்தன.
சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் தொடர்ந்து 32வது நாளாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இதனிடையே, நேற்று புதிதாக 3,439 பேரைக் கிருமி தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 2,937 பேர் சமூகத்தில் இருப்போர், 500 பேர் தங்குவிடுதி வெளிநாட்டு ஊழியர்கள், இருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.
இதனையடுத்து, சிங்கப்பூரில் மொத்த கொரோனா பாதிப்பு 162,026 ஆனது.
கிருமித்தொற்றுக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் 61 பேர் உட்பட 1,613 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 346 பேர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது.