நாடு முழுவதும் வீட்டுக்கு வீடு 'ஏஆர்டி' ஆன்டிஜன் விரைவு பரிசோதனை கருவிகளை விநியோகிக்கும் பணி நேற்றுக் காலை தொடங்கியது.
சிங்போஸ்ட் ஊழியர்களில் ஒருவரான ஷர்லி சீ பீ லெங், கம்பாஸ்வேல் கிரசெண்டில் உள்ள வீவக வீடு களுக்கு தள்ளுவண்டியில் 140க்கும் மேற்பட்ட பொட்டலங்களை எடுத்துச் சென்றார். ஒவ்வொன்றிலும் பத்து 'ஏஆர்டி' கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.
ஷர்லியைப் போன்று ஆயிரம் சிங்போஸ்ட் ஊழியர்கள் நேற்று தீவு முழுவதும் சென்று வீவக குடியிருப்பாளர்களின் கடிதப் பெட்டியில் 'ஏஆர்டி' கருவிகளைச் சேர்த்தனர்.
இது, இரண்டாவது முறையாக நடைபெறும் மாபெரும் விநியோகிப்பு இயக்கமாகும்.
சிங்கப்பூரில் புதிய தொற்றுச் சம்பவங்கள் நாள்தோறும் ஆயிரத்தைத் தாண்டி வரும் வேளையில் டிசம்பர் 7ஆம் தேதி வரை இந்த விநியோகம் தொடரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இந்தக் கருவிகளை 1.54 மில்லியன் குடும்பங்களுக்கு சிங்போஸ்ட் வழியாக விநியோகித்து வருகிறது.
கொவிட்-19 தொற்றுநோயோடு வாழ்ந்து தாக்குப்பிடிக்கும் நாடாக சிங்கப்பூர் மாறி வருவதால் அந்த நோயை நிர்வகிப்பதில் சிங்கப்பூரர் களின் பங்கும் அதிகரித்து வருகிறது என்று ஆகஸ்ட்டில் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.