‘தொற்று அபாயம் அதிகம்’ உள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரை சேர்க்கவுள்ளது ஜெர்மனி. நாளை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 24) அப்பட்டியலில் சிங்கப்பூர் சேர்க்கப்படும் என ஜெர்மானிய அரசாங்க சுகாதார அமைப்பான ‘ரோபர்ட் காச்’ தெரிவித்தது.
சிங்கப்பூருடன் பல்கேரியா, கேமரூன், குரோஷியா மற்றும் காங்கோ குடியரசு ஆகிய மற்ற நான்கு நாடுகளும் அப்பட்டியலில் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.
ஜெர்மனியின் சுகாதார அமைச்சு, வெளியுறவு அலுவலகம், உள்துறை, கட்டட, சமூக அமைச்சு ஆகியவற்றின் கூட்டு அறிக்கையை சுட்டிக்காட்டி ‘ரோபர்ட் காச்’ இந்தத் தகவலை வெளியிட்டது.
இருந்தாலும், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தல் இன்றி ஜெர்மனிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று சிங்கப்பூரில் உள்ள ஜெர்மானியத் தூதரகம் கூறியது.
ஆனால், ஜெர்மனி செல்வதற்கு முன்பு மின்னிலக்க வழி (einreiseanmeldung.de) முன்பதிவு செய்வது இனி கட்டாயமாகும்.
மேலும், 12 வயதுக்குக்கீழ் உள்ள, தடுப்பூசி போட்டிராத சிறுவர்கள் ஜெர்மனி வந்திறங்கியவுடன் ஐந்து நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தூதரகம் குறிப்பிட்டது.