இரு நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்பட்டால், ஒரே வீட்டில் வசிப்பவர்கள் ஐவராகச் சேர்ந்து உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண அனுமதி வழங்கப்படும் என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு இன்று சனிக்கிழமை (அக்டோபர் 23) தெரிவித்தது.
முதலாவது, வாராந்திர கொவிட்-19 தொற்று விகிதம் ஒன்றுக்குக்கீழ் குறைய வேண்டும். அதாவது, கொவிட்-19 தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைய வேண்டும்.
இரண்டாவது, மருத்துவமனை நிலவரம் தொடர்ந்து சீராக இருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்பட்டால், கூடுதலான குழு விளையாட்டுகளுக்கும் பள்ளி நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.
வாரந்தோறும் தொற்று விகிதம் ஒன்றுக்கு கீழ் இருந்தால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும். மருத்துவமனைகள், குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவுகளில் நிலைமை கட்டுக்குள் இருக்க வேண்டும். அப்போதுதான் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியும் என்றார் அவர்.
தற்போது தொற்று விகிதம் ஒன்றுக்குமேல் இருப்பதை அமைச்சர் வோங் சுட்டிக்காட்டினார்.