இர்ஷாத் முஹம்மது
சிங்கப்பூரில் பதிவாகும் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களின் அன்றாட அதிகரிப்பு விகிதம், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு கடும் உடல்நலக்குறைவுக்கு ஆளாவோரின் விகிதம், மருத்துவமனைகளில் குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைகள் நிரப்பப்படும் விகிதம் ஆகிய மூன்று அம்சங்களை ஆராய்ந்த பின், அடுத்த கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்படும்.
நிதியமைச்சரும் கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு லாரன்ஸ் வோங் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டார்.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டுத் தளர்வுகளில் வீடுகளுக்குச் செல்வது தொடர்பில் தகவல் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
தீபாவளியைக் கருத்தில்கொண்டு அந்த தளர்வுகளைச் செயல்படுத்தும் சாத்தியம் உள்ளதா என்று தமிழ் முரசு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் வோங் இவ்வாறு பதிலளித்தார்.
கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டிலும் நோய்ப் பரவல் சூழலில் மக்கள் பண்டிகைகளைக் கொண்டாடியுள்ளதை நினைவுபடுத்தினார் அமைச்சர்.
தொடர்ந்து கிருமிப் பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று நம்பிக்கையளித்தார்.
அடுத்த கட்ட தளர்வுகளை அறிவிப்பதற்கு என்னென்ன அம்சங்களை அமைச்சுகள்நிலைப் பணிக்குழு ஆராயும் என்பதைத் தொடர்ந்து விளக்கினார் அமைச்சர் வோங்.
ஒரு வாரத்தில் பதிவாகும் தொற்று எண்ணிக்கை, அதற்கு முந்திய வாரத்தின் தொற்று எண்ணிக்கையைவிட ஒரு விகிதம் குறைவாக இருக்குமாயின் தளர்வுகள் அறிவிக்கப்படும்.
தற்போது அந்த விகிதம் 1க்கும் சற்று அதிகமாக உள்ளது என்றும் முன்னர் அந்த எண்ணிக்கை 1.5ஆக இருந்தது என்றும் அமைச்சர் கூறினார்.
அதைப்போல தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் பயன்பாட்டு எண்ணிக்கையையும் கருத்தில்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
நோய்ப் பரவல் சூழல் கட்டுக்குள் வந்தால் மூன்று அம்சங்களில் முதலில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
குழு விளையாட்டுகளை அனுமதிப்பது, பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் கூடுதல் நடவடிக்கைகளைத் தொடங்குவது, ஒரே வீட்டைச் சேர்ந்த ஐவர் ஒன்றாக வெளியில் சென்று உணவருந்துவது ஆகியவற்றை அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.