கொவிட்-19க்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கையாக சிங்கப்பூர் வருவதற்குக் குறிப்பிட்ட சில நாட்டுப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இருப்பினும், அனைத்துலக கொவிட்-19 சூழலுக்கு ஏற்ப, எல்லைகள் தொடர்பான நடவடிக்கைகளில் மாற்றம் செய்துவரும் சிங்கப்பூர், இனி ஆறு தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளைப் புதன்கிழமை முதல் அனுமதிக்கும்.
இந்தியா, இலங்கை, நேப்பாளம், மியன்மார், பங்ளாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குக் கடந்த 14 நாட்கள் சென்றுள்ள பயணிகள், சிங்கப்பூருக்கு வரவும் சிங்கப்பூர் வழியாக வேறு நாட்டுக்குச் செல்லவும் அனுமதிக்கப்படுவர் என்று நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சு தெரிவித்தது. இருப்பினும், குறுகியகால வருகையாளர்களுக்கு இந்தத் தளர்வு பொருந்தாது. இந்த ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள், சிங்கப்பூர் வந்ததும் குறிப்பிட்ட ஒரு வளாகத்தில் 10 நாட்களுக்குத் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.
மலேசியா, இந்தோனீசியா உட்பட வேறு பல நாடுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் புதன்கிழமை முதல் தளர்த்த உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது. இவ்விரு நாடுகளைச் சேர்ந்தோர், தாங்களே ஓர் இடத்தைத் தேர்வுசெய்து அங்கு தங்களின் 10 நாள் தனிமை உத்தரவை நிறைவேற்றலாம்.

