2035ல் 30% மின்சாரத்தைக் கரிமம் குறைவான ஆலைகளில் இருந்து பெற சிங்கப்பூர் திட்டம்
சிங்கப்பூர் தனது எரிசக்தித் துறையில் கரிம அளவை மேலும் குறைக்க திட்டமிடுகிறது. வரும் 2035ஆம் ஆண்டு வாக்கில் சூரிய, காற்று எரிசக்தி ஆலைகள் போன்ற கரிமம் குறைந்த நிறுவனங்களிடம் இருந்து ஏறத்தாழ 30 விழுக்காட்டு மின்சாரத்தைப் பெற்று அதன் மூலம் அந்தத் திட்டத்தை சிங்கப்பூர் நிறைவேற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் திட்டங்களின் பலனாக சிங்கப்பூர் மற்ற நாடுகளில் இருந்து காற்று எரிசக்தி, நீர்மின்சக்தி வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள வழி ஏற்படும்.
வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார தொடக்க நிகழ்ச்சியில் இதனை அறிவித்தார்.
வருங்காலத்தில் சிங்கப்பூரின் எரிசக்தித் துறை பரிணாமத்தில் குறைந்த கரிம எரிசக்தியை இறக்குமதி செய்வதே முக்கியமான அணுகுமுறையாக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பல நாடுகளும் தங்களுடைய எரிசக்தித் துறையை உருமாற்றம் செய்யப்போவதாக ஏற்கெனவே உறுதி கூறி உள்ளன. நிலக்கரி, இதர எரிபொருள் படிவங்களைக் குறைத்துக்கொண்டு சூரிய சக்தி, காற்று மின்சக்தி போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்த அவை இலக்கு நிர்ணயித்து இருக்கின்றன.
இருந்தாலும்கூட இந்த மாற்றம் ஒரு சவாலாகவே இருக்கும். சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்றால் இதில் ஆபத்தும் இருக்கிறது என்றார் அமைச்சர்.
வழிவழியாக எரிசக்தியைப் பெறுகின்ற முறையின் பெரும் பகுதியை ஒரு நாடு திடீரென மாற்றினால் எதிர்பாராத பாதுகாப்பு, நம்பகத்தன்மை பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதைச் சுட்டிய அமைச்சர், இருந்தாலும் சிங்கப்பூர் தனது எரிசக்தித் துறை உருமாற்றத்தைக் கைவிடாது அல்லது அந்த வேகத்தைக் குறைக்காது என்று தெரிவித்தார்.
வழிவழியான எரிசக்தி முறைக்குப் பதிலாக சூரிய மின்சக்தி, காற்று மின்சக்தி போன்ற துறைக்கு மாறுவது மின்சாரத்தை மலிவாகப் பெறுவதற்கான வழியாக இருக்க வாய்ப்பு இல்லாமலும் போகலாம் என அமைச்சர் சுட்டினார்.
2035ஆம் ஆண்டுவாக்கில் சிங்கப்பூருக்கு மொத்தம் 4 கிகாவாட் குறைந்த அளவு கார்பன் மின்சாரத்தை இறக்குமதி செய்வதற்கான திட்டங்களைத் தாக்கல் செய்யும்படி இரண்டு வேண்டுகோள்களை விடுக்கலாம் என்று எரிசக்திச் சந்தை ஆணையம் திட்டமிடுகிறது.
கரிமக் குறைப்புத் தொழில்நுட்பங்களுக்கு $10 மி. புதிய நிதிகள் அறிவிப்பு
கரிமத்தைக் குறைப்பதற்கான ஆய்வுகளுக்கு சிங்கப்பூர் மேலும் நிதி ஒதுக்குகிறது. இதனையொட்டி மொத்தம் $10 மில்லியன் புதிய நிதிகள் நேற்று தொடங்கப்பட்டன. சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார தொடக்க நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளும் இதற்கான அறிவிப்புகளை விடுத்தன.
கரிமம் குறைந்த எரிசக்தி ஆய்வு நிதி பற்றி ஏற்கெனவே ஓர் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதற்குத் தொடக்கத்தில் $49 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகை $55 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தொகை ஹைட்ரஜன், கார்பன் பயனீடு, சேமிப்பு உள்ளிட்ட பல துறைகளிலும் இடம்பெறும் 12 ஆய்வுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
எரிசக்திச் சந்தை ஆணையத்திற்கும் 'என்விஷன் டிஜிட்டல் இன்டர்நேஷனல்' என்ற நிறுவனத்துக்கும் இடையில் புதிதாக $4 மில்லியன் பங்காளித்துவ உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது.
எரிசக்திச் சந்தை ஆணையம், ஜூரோங் நகராண்மைக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த $6 மில்லியன் தொகை என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் ஆதரவுடன் ஜூரோங் தீவு சூரிய, காற்று எரிசக்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங், எரிசக்தியை செம்மையாகப் பயன்படுத்திக்கொள்ள புத்தாக்க வழிகளை சிங்கப்பூர் காணவேண்டும் என்றார்.

