கொவிட்-19 தொற்றால் 60 முதல் 93 வயதிற்குட்பட்ட மேலும் 14 பேர் நேற்று 25ஆம் தேதி திங்கட்கிழமை இறந்துவிட்டனர். இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனாவால் மாண்டோர் எண்ணிக்கை 329ஆக உயர்ந்தது.
அவர்கள் அனைவர்க்கும் வேறு உடல்நலக் குறைபாடுகளும் இருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தொடர்ந்து 36வது நாளாக கிருமித்தொற்றால் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
நேற்று புதிதாக 3,174 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் 2,843 பேர் சமூகத்தில் இருப்பவர்கள், 322 பேர் விடுதிகளில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், ஒன்பது பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.
வாராந்திர கிருமித்தொற்று உயர்வு விகிதம் 1.18ஆக இருக்கிறது.
இதனையடுத்து, மொத்த கொரோனா பாதிப்பு 175,818 ஆனது.
இதனிடையே, மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நேற்று முன்தினம் 75ஆக இருந்த காலிப் படுக்கைகளின் எண்ணிக்கை, நேற்று 60ஆகக் குறைந்துவிட்டது.
அப்பிரிவில் மொத்தமுள்ள 366 படுக்கைகளில் 171 பேர் கொரோனா தொற்றுக்காகவும் 135 பேர் மற்ற உடல்நலக் குறைபாடுகளுக்காகவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.