தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் மேலும் இரு நாடுகளுக்கு விரிவாக்கம்

தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் மேலும் இரு நாடுகளுக்கு விரிவாக்கம்

2 mins read
a2a14512-6370-4c12-b005-5d0ecf2091e5
தனது எல்லைகளைத் திறந்துவிடுவதில் சிங்கப்பூர் விடாமுயற்சியுடன் செயல்படுவது முக்கியம் என்றார் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து நவம்பர் 8ஆம் தேதி முதல் சிங்கப்பூர் வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், இங்கு வந்திறங்கியதும் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

சிங்கப்பூரின் தடுப்பூசிப் பயணத்தட (Vaccinated Travel Lane) திட்டம் ஆஸ்திரேலியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளதால் இது சாத்தியமாகிறது.

இதன்மூலம், ஆஸ்திரேலியவாசிகள் சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே அடுத்த மாதத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி பயணம் மேற்கொள்ளலாம்.

மாணவர்களும் தொழிலதிபர்களும் சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கான இதேபோன்ற பயண ஏற்பாடு நவம்பர் 23ஆம் தேதிக்குள் நடப்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளுக்கு சுவிட்சர்லாந்து தனது எல்லைகளை ஏற்கெனவே திறந்துவிட்டுள்ளது. இப்போது, தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தில் சுவிட்சர்லாந்து சேர்க்கப்பட்டுள்ளதன்மூலம், சிங்கப்பூர்வாசிகள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி சுவிட்சர்லாந்து சென்று திரும்பலாம்.

இதற்கிடையே, சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் சுற்றுப்பயணிகள் உட்பட தடுப்பூசி போட்டுக்கொண்ட இதர பயணிகளுக்கான பயண ஏற்பாடு ஆண்டிறுதிக்குள் நடப்புக்கு வரலாம் என ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உடனான தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தைப் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 26) அறிவித்தார்.

தனது எல்லைகளைத் திறந்துவிடுவதில் சிங்கப்பூர் விடாமுயற்சியுடன் செயல்படுவது முக்கியம் என்று அவர் கூறினார்.

சிங்கப்பூருடன் ஆஸ்திரேலியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் வலுவான பொருளியல் உறவு இருப்பதை அவர் சுட்டினார். இரு நாடுகளில் கொவிட்-19 தொற்றுப் பாதிப்பு குறைவாக இருப்பதையும் அவர் சுட்டினார்.

தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தைக் கூடுதலான நாடுகளுக்கு விரிவுபடுத்த, அண்டை நாடுகள் உட்பட மற்ற நாடுகளுடன் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.

தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் இதுவரை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், கூடுதலான நாடுகளுக்கு அதை விரிவுபடுத்த தனக்கு நம்பிக்கை கிடைத்துள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

2019ல் சிங்கப்பூருக்கு வந்த மொத்த பயணிகள் எண்ணிக்கையில், ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தோர் 4 விழுக்காட்டினர் என்று ஆணையம் குறிப்பிட்டது.

ஆஸ்திரேலியாவில் 50,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் வசிக்கின்றனர். சிங்கப்பூரில் 25,000க்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் உள்ளனர்.

சிங்கப்பூரில் 3,000க்கும் மேற்பட்ட சுவிஸ் நாட்டவர்கள் வசிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்