ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து நவம்பர் 8ஆம் தேதி முதல் சிங்கப்பூர் வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், இங்கு வந்திறங்கியதும் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
சிங்கப்பூரின் தடுப்பூசிப் பயணத்தட (விடிஎல்) திட்டம் ஆஸ்திரேலியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ள நிலையில் இது சாத்தியமாகியுள்ளது. அதன்படி, அடுத்த மாதத்திலிருந்து சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி ஆஸ்திரேலியவாசிகள் பயணம் மேற்கொள்ளலாம்.
மாணவர் மற்றும் வர்த்தக அனுமதி அட்டை வைத்திருப்போர், சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கான இதேபோன்ற பயண ஏற்பாடு நவம்பர் 23ஆம் தேதிக்குள் நடப்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளுக்கு சுவிட்சர்லாந்து தனது எல்லைகளை ஏற்கெனவே திறந்துவிட்டுள்ளது.இப்போது தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தில் சுவிட்சர்லாந்து சேர்க்கப்பட்டுள்ளதன்மூலம், சிங்கப்பூர்வாசிகள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி சுவிட்சர்லாந்து சென்று திரும்பலாம்.
சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் சுற்றுப்பயணிகள் உட்பட தடுப்பூசி போட்டுக்கொண்ட இதர பயணிகளுக்கான பயண ஏற்பாடு, ஆண்டிறுதிக்குள் நடப்புக்கு வரலாம் என ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் கடந்த வெள்ளிக்கிழமை கூறிஇருந்தார். ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உடனான தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் குறித்து போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் அறிவித்தார்.
தனது எல்லைகளைத் திறந்துவிடுவதில் சிங்கப்பூர் முனைப்புடன் செயல்படுவது முக்கியம் என்று அவர் கூறினார். விமானத்துறை நடுவமாக சிங்கப்பூர் அதன் தகுதியை மீண்டும் வளர்த்துக்கொள்வதும் அவசியம் என்றார். சிங்கப்பூருடன் ஆஸ்திரேலியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் வலுவான பொருளியல் உறவு இருப்பதை அவர் சுட்டினார். இரு நாடுகளில் கொவிட்-19 தொற்றுப் பாதிப்பு குறைவாக இருப்பதையும் அவர் குறிப்பிட்டார். அண்டைநாடுகள் உட்பட மேலும் அதிக நாடுகளுக்குத் தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பில் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.
தற்போது 'விடிஎல்' திட்டத்தின்கீழ் ஒரு நாளில் 3,000 பயணிகள் வரை பயணம் மேற்கொள்ளலாம். புதிதாக ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து இத்திட்டத்தில் சேர்த்ததன் மூலம் இந்த எண்ணிக்கை 4,000க்கு உயர்த்தப்படும் என்று திரு ஈஸ்வரன் அறிவித்தார்.
'விடிஎல்' திட்டம் மூலம் சிங்கப்பூருக்குள் வருவோர், கொவிட்-19 கிருமிப் பரிசோதனையை மட்டுமே மேற்கொள்ள வேண்டி இருக்கும். சிங்கப்பூர் இதுவரை 11 'விடிஎல்' திட்டங்களை அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உடனான 'விடிஎல்' திட்டங்கள் தொடங்கிவிட்டன. தென்கொரியாவுடனான 'விடிஎல்' திட்டம் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் இதுவரை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், கூடுதலான நாடுகளுக்கு அதை விரிவுபடுத்த தனக்கு நம்பிக்கை கிடைத்துள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியது. 2019ல் சிங்கப்பூருக்கு வந்த மொத்த பயணிகள் எண்ணிக்கையில், ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தோர் 4 விழுக்காட்டினர் என்று ஆணையம் குறிப்பிட்டது.
ஆஸ்திரேலியாவில் 50,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் வசிக்கின்றனர். சிங்கப்பூரில் 25,000க்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் உள்ளனர். சிங்கப்பூரில் 3,000க்கும் மேற்பட்ட சுவிஸ் நாட்டவர்கள் வசிக்கின்றனர். பிரதான நிதி மையமாக விளங்கும் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூரின் முன்னணி வர்த்தக, முதலீட்டு பங்காளிகளில் ஒன்றாக விளங்குகிறது.