மியன்மார் ராணுவ அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு விரைவில் தேவைப்படுவதாக பிரதமர் லீ சியன் லூங் அறிவுறுத்தியுள்ளார். தற்போது மியன்மாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தணிக்கும் ஆசியானின் முயற்சிகளில் ஒன்றாக, சிறப்புத் தூதர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்குமுன்பு தொடங்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைத் திட்டத்தில் 'முன்னேற்றம் அவ்வளவாக இல்லை' என்று குறிப்பிட்ட திரு லீ, இதனால் மியன்மார் மக்களுக்கும் விதிமுறைகள் சார்ந்த அமைப்பாகக் கருதப்படும் ஆசியானின் நம்பகத்தன்மைக்கும் உண்மையான விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறினார். வட்டார நாடுகளின் தலைவர்களுடன் நடைபெற்ற ஆசியான் இணைய மாநாட்டின்போது திரு லீ இவ்வாறு பேசியிருந்தார்.
மியன்மாரில் ஏற்பட்டு வரும் பதற்றநிலையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவோ பேச்சுவார்த்தை தொடங்கவோ தவறிவிட்ட காரணத்தால், ராணுவத் தலைவர் மின் அவுங் லைங்கை ஓரங்கட்டும் அரிய முடிவுக்கு வந்தது, பத்து உறுப்புநாடுகளைக் கொண்ட ஆசியான்.
அதனால், மாநாட்டின்போது மியன்மார் தலைவருக்குரிய வெற்று இருக்கை மட்டுமே காணப்பட்டது.
பிப்ரவரியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப்பின், மியன்மாரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர்.
"ஆக்கபூர்வமான, அமைதியான, நேர்மறையான வகையில் மியன்மாருக்கு உதவும் ஆசியானின் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் அதன் வலுவான ஆதரவை அளிக்கிறது," என்று திரு லீ குறிப்பிட்டார்.