யானையைக் கட்டுப்படுத்த தமிழ்மொழியைப் பயன்படுத்தியதாக மலேசிய நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஸீஸ் அப்துல் ரஹிம் கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அவ்வாறு கூறியதை அப்துல் அஸீஸ் மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை அதுபோல பேசக்கூடாது என்றும் எதிர்த்தரப்பு ஜனநாயகச் செயல் கட்சி உறுப்பினர் ஆர்என்ஆர் ராயர் கூறினார்.
"யானைகளிடம் தமிழில் பேசியதாக அப்துல் அஸீஸ் கூறுவது முட்டாள்தனமானது," என்றார் அவர். காயமடைந்த காட்டு யானை ஒன்று கரும்புத் தோட்டத்தை அழித்தபோது தாம் அதனிடம் தமிழில் பேசி உணவு அளித்ததாக அப்துல் அஸீஸ் கூறியிருந்தார்.
முன்னோர்கள் யானைகளிடம் தமிழ், தாய்லாந்து மொழி மற்றும் மியன்மார் மொழிகளில் பேசியதால் தாம் தமிழ்மொழியைப் பயன்படுத்தியதாக அவர் விளக்கினார்.
இருப்பினும் ஆறுதல் அடை யாத ராயர், அப்துல் அஸீஸைத் தாக்கிப் பேசினார். மோதல் நிலை உருவானதால் உட்காருமாறு மன்ற நாயகர் கூறியும் பேசிக்கொண்டு இருந்த ராயர் மன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

