சிங்கப்பூரில் முதன்முதலாக நேற்று புதன்கிழமை (27-10-2021) புதிதாக 5,324 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இப்படி ஒரே நாளில் 5,000 பேர்க்குமேல் கொரோனா தொற்றியிருப்பது இதுவே முதன்முறை.
புதிதாகக் கிருமி தொற்றியோரில் 4,651 பேர் சமூகத்தில் இருப்போர், 661 பேர் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், 12 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.
இந்த திடீர் உயர்வு வழக்கத்திற்கு மாறாக இருப்பதாகக் குறிப்பிட்ட சுகாதார அமைச்சு, நேற்றுப் பிற்பகலில் சில மணி நேரங்களில் பல தொற்று பாதிப்புகளைப் பரிசோதனை ஆய்வகங்கள் கண்டுபிடித்ததாகத் தெரிவித்தது.
இந்தப் போக்கை அடுத்த சில நாள்களுக்கு அணுக்கமாகக் கண்காணிக்கப்போவதாகவும் அமைச்சு கூறியது.
இதனிடையே, 54 முதல் 96 வயதிற்குட்பட்ட மேலும் பத்துப் பேர் கிருமித்தொற்றால் மாண்டுவிட்டனர். அவர்களில் தடுப்பூசி போடாத ஒருவரைத் தவிர மற்ற அனைவர்க்கும் வேறு பல உடல்நலக் குறைபாடுகளும் இருந்தன.
இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 184,419ஆகவும் மரண எண்ணிக்கை 349ஆகவும் உயர்ந்தது.
தொடர்ந்து 38வது நாளாக கொரோனா தொற்றால் மரணம் நிகழ்ந்துள்ளது.
வாராந்திர தொற்று அதிகரிப்பு விகிதம் 1.15ஆக இருக்கிறது.