பலதுறை மருந்தகத்திற்குச் செல்லும்போது அடையாள அட்டையை எடுத்துச் செல்ல மறந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம்! இனிமேல் அது ஒரு பிரச்சினையாக இராது.
ஏனெனில், அதற்குப் பதிலாக சிங்பாஸ் செயலியில் மின்னிலக்க அட்டையைப் பயன்படுத்த முடியும்.
வரும் திங்கட்கிழமை நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து, அனைத்து அரசாங்க அமைப்புகளிலும் நேரடிச் சேவைகளைப் பெறும்போது மின்னிலக்க அட்டையைப் பயன்படுத்தலாம்.
பலதுறை மருந்தகங்களில் பெயர்ப் பதிவுசெய்தல், நூலகங்களில் நூல் இரவல் பெறுதல், குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தில் கடப்பிதழ் பெறுதல், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தில் வீட்டிற்குப் பதிவுசெய்தல் மற்றும் சாவி பெறுதல், அரசாங்கக் கட்டடங்களில் நுழையும்போது பெயர்ப் பதிவுசெய்தல் ஆகியவற்றுக்கு சிங்பாஸ் செயலியில் உள்ள மின்னிலக்க அட்டையைப் பயன்படுத்தலாம்.
அடுத்த திங்கட்கிழமையில் இருந்து, அரசாங்க அமைப்புகள் மக்களின் அடையாள அட்டைகளை நகல் எடுக்காது.
இப்போதைக்கு, 15 வயதும் அதற்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளில் 97 விழுக்காட்டினர் சிங்பாஸ் கணக்கு வைத்துள்ளனர். 3.2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் சிங்பாஸ் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

