சிங்கப்பூரில் நேற்று நேற்று வியாழக்கிழமை (28-10-2021) புதிதாக 3,432 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் ஒன்பது பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
அவர்களில் ஒருவர் ஏஒய்.4.2 கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு ஓர் அறிக்கை மூலமாகத் தெரிவித்து இருக்கிறது. இந்த ஏஒய்.4.2 கிருமியைச் சிலர் ‘டெல்டா பிளஸ்’ எனக் குறிப்பிடுகின்றனர்.
அவரிடம் இருந்து சமூகத்தில் அக்கிருமி பரவியதற்குச் சான்று இல்லை என்று அமைச்சு கூறியுள்ளது.
டெல்டா பிளஸ் கிருமி புதுவகைக் கிருமி இல்லை என்றும் ஆனால் உருமாறிய ‘டெல்டா’ கிருமியின் துணைமாற்றுரு என்றும் அமைச்சு விளக்கியது.
அக்கிருமி ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து இன்னும் ஆராயப்பட்டு வருகிறது. ஆயினும், பரவும் தன்மையிலும் நோயின் கடுமையிலும் அது ‘டெல்டா’ கிருமியின் மற்ற துணைமாற்றுருக்களை ஒத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏஒய்.4.2 கிருமியைக் கவனிக்கத்தக்க மாற்றுரு என்றும் ஆனால் கவலைப்படத்தக்க மாற்றுரு இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தி இருக்கிறது.