வெளிநாட்டு ஊழியர்கள் சிறிய பேருந்துகளில் வசதியாகவும் ஏற்புடைய விலையிலும் பாதுகாப்புடன் பயணம் செய்ய உதவும் சேவையைப் புதிய உள்ளூர் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சேவையில் ‘எஸ்படா எஸ்எல்’ எனும் செயலியும் அடங்கும்.
தேவைக்கு ஏற்ப முன்பதிவு செய்யக்கூடிய வாகனங்களின் பட்டியலை இந்தச் செயலி வழங்கும் என்று எஸ்படா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜீன் கிறிஸ்டஃபர் லீ தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு தங்குவிடுதிகளிலிருந்து வேலையிடங்களுக்குச் செல்லும் நடைமுறை கடந்த பல ஆண்டுகளாக நடப்பில் உள்ளதை அவர் சுட்டினார். இந்தப் பயண முறையைக் குறைப்பதே புதிய செயலியின் இலக்கு என்றார் அவர்.
லாரியில் பயணம் செய்த வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பாக, இந்த ஆண்டில் மட்டும் குறைந்தது நான்கு சாலை விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றில் இரண்டு பேர் மாண்டனர், 30க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
ஓர் இடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் முறையால் பாதுகாப்பு குறித்து அச்சம் இருப்பதை போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் கடந்த மே மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், செலவுகள் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால், வெளிநாட்டு ஊழியர்களை லாரியில் ஏற்றிச் செல்வதற்கான முறைக்கு எதிராக கடந்த பத்து ஆண்டுகளில் கட்டுப்பாடுகளை விதிக்க முடியவில்லை என்றார் அவர்.
‘எஸ்படா எஸ்எல்’ செயலியின் சிறிய பேருந்து முன்பதிவு அம்சம் இம்மாதம் 22ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தச் சேவையைப் பயன்படுத்தினால் நிறுவனங்கள் சொந்த வாகனங்களை வைத்திருக்கத் தேவையில்லை என்றும் அவற்றைப் பராமரிப்பதற்கான செலவுகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் திரு லீ தெரிவித்தார்.
எஸ்படாவின் செயலியைப் பயன்படுத்தி தேவைக்கு ஏற்ப, ஏற்புடைய விலையில் சிறிய பேருந்துகளை நிறுவனங்கள் வாடகைக்கு எடுக்கலாம் என்றார் அவர்.
எஸ்படா நிறுவனத்திடம் தற்போது 11 சிறிய பேருந்துகள் உள்ளன. அவற்றில் ஏழு முதல் 13 பேர் வரை அமரலாம். பேருந்துகளின் எண்ணிக்கையை 200க்குமேல் உயர்த்த அந்நிறுவனம் திட்டமிடுகிறது.