கொவிட்-19 சூழலில் தங்குவிடுதிகளைவிட்டு வெளியே செல்ல முடியாமல் தவிக்கும் பல வெளிநாட்டு ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு கோவில் செல்ல வாய்ப்பு கிடைத்தது.
கிட்டத்தட்ட 40 வெளிநாட்டு ஊழியர்கள், நேற்று ‘காமன்வெல்த்’ முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்றிருந்தனர். தீபாவளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றதுடன் அன்பளிப்புப் பைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
அன்பளிப்புப் பைகளை மனிதவள அமைச்சர் திரு டான் சீ லெங் வழங்கினார்.
மனிதவள அமைச்சுக்குக் கீழ் நிர்வாகம், உத்தரவாதம், பராமரிப்பு மற்றும் ஈடுபாட்டுக் குழுவான ‘ஏஸ்’(ACE), சிறப்பு வழிபாடுகளைக் குறிப்பிட்ட சில கோவில்களில் ஏற்பாடு செய்திருக்கிறது.
முறுக்கு, அதிரசம், பால்கோவா, லட்டு என விதவிதமான பலகாரங்கள், பல்வேறு பழச்சாறுகள் மற்றும் திருநீறு போன்றவை அன்பளிப்புப் பைகளில் வைக்கப்பட்டிருந்தன.
“வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை கேளிக்கை நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர வெளியே செல்லும் வாய்ப்பு எங்களுக்கு அதிகம் கிடையாது,” என்று கட்டுமானப் பணியில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் திரு வைரமுத்து கூறினார். இதுபோன்ற நிகழ்வுகள் அவருக்கு மனநிறைவை அளிப்பதாகக் கூறுகிறார்.
“நம் குமுறல்களுக்குச் செவிசாய்க்க மனநல ஆலோசகர்கள் பலர், வாரத்தில் இரண்டு முறையாவது வந்து நலம் விசாரிப்பர். எங்கள் முதலாளிகளும் குறை ஏதுமின்றி எங்கள் ஆரோக்கியத்திற்கும் மனநலத்திற்கும் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்,” என்று திரு ஆனந்தன் தெரிவித்தார்.
காலாங் வாம்போவில் அமைந்துள்ள தங்குவிடுதி ஒன்றில் வசிக்கும் திரு ஆனந்தன் மற்றும் திரு வைரமுத்து, வெளிநாட்டு ஊழியர்களின் சார்பாக தங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
“மீள்திறனுடன் கடினமாக உழைக்கும் இந்த ஊழியர்களுக்கு உதவி செய்தே தீர வேண்டும் என்று எனக்குத் தோன்றியது,” என்றார் நிகழ்வுக்கு நன்கொடை வழங்கியிருந்த திரு சந்திரன் மோகன்.
இன்னும் பல அரசு சாரா அமைப்புகள் இந்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் என்பதே இவருடைய கோரிக்கை.
வரும் 7ஆம் தேதியன்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயம், ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் ஆகியவற்றில் இன்னும் பல வெளிநாட்டு ஊழியர்களுக்கு இதுபோன்ற சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தொடர்ந்து பரிவும் ஆதரவும் வழங்கப்படுவதற்குச் சான்றாக இந்தச் சிறப்பு வழிபாடுகள் திகழ்கின்றன.
கூடுதல் செய்தி: பாவை சிவக்குமார்