கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் உலகிற்கு உதவும் நோக்கத்தில் அடுத்த ஆண்டு முடிவு வாக்கில் 5 பில்லியன் கொவிட்-19 தடுப்பூசியை தயாரித்து தர இந்தியா தயாராக இருக்கிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரோம் நகரில் நடந்த ஜி20 கூட்டத்தில் சனிக்கிழமை இந்த உறுதியை வழங்கினார். கொவிட்-19 தொற்றைத் துடைத்தொழிக்கும் போராட்டத்தில் இந்தியா செய்து வரும் உதவிகளை திரு மோடி எடுத்துரைத்தார்.
ரோம் நகரில் திரு மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், அவர் ஆற்றிய உரை பற்றி இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அனைத்துலக பயணத்திற்கு வழி திறக்க வேண்டிய தேவை இருப்பதாகக் கூறிய திரு மோடி, தடுப்பூசி சான்றிதழை பரஸ்பரம் அங்கீகரிக்கும் ஓர் ஏற்பாடு தேவை என்றார்.
இந்தியாவின் சொந்தத் தயாரிப்பான கொவேக்சின் தடுப்பூசியை அவசர பயனீட்டு மருந்தாக உலக சுகாதார நிறுவனம் இன்னமும் அங்கீகரிக்க வில்லை. இந்த அங்கீகாரம் உடனே கிடைக்க வேண்டும் என்றும் அப்படி கிடைத்தால் மற்ற நாடுகளுக்கு இந்தியா உதவ முடியும் என்றும் திரு மோடி கூறியதாக இந்திய வெளியுறவு செயலாளர் தெரிவித்தார்.