மிகச் சிறந்த மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட்டு வந்தாலும், சிங்கப்பூர் ஆண்டுக்கு ஏறத்தாழ 2,000 கொவிட்-19 மரணங்களைச் சந்திக்க நேரிடலாம் என்றும் அவ்வாறு மடிபவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாகவும் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டவர்களாகவும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்ந்த தடுப்பூசி விகிதம், ‘பூஸ்டர்’ எனப்படும் கூடுதல் தடுப்பூசிகள், இலேசான நோய்த்தொற்று மூலம் இயற்கையான முறையில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவது ஆகிய உத்திகளைக் கையாளுவதன் மூலம், கொவிட்-19 பரவுவதைத் தடுக்க அரசாங்கம் தனது பங்கை ஆற்றுகிறது என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி இன்று திங்கட்கிழமை (நவம்பர் 1) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கொவிட்-19 மரண விகிதம் 0.2% ஆக உள்ளது.
மற்ற நாடுகளில் தடுப்பூசித் திட்டம் தொடங்குவதற்குமுன், தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமானபோது, மரண விகிதம் 3% அல்லது அதற்கு மேற்பட்டு இருந்ததை டாக்டர் ஜனில் சுட்டினார்.
இதுவரை சிங்கப்பூரில் 407 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துவிட்டனர்.
மேற்கூறப்பட்ட இந்த 0.2% விகிதம், நிமோனியா பிரச்சினைக்கு ஒப்பானது என்று அவர் விளக்கினார்.
“பெருந்தொற்றுக்குமுன், சளிக்காய்ச்சல், நிமோனியா கிருமி, இதர சுவாசப் பிரச்சினைகள் காரணமாக பொதுவாக ஆண்டுக்கு 4,000 நோயாளிகள் மரணமடைந்தனர்.
“போதுமான மருத்துவப் பராமரிப்பு இல்லாத காரணத்தால் மிகக் கூடுதலான மரணங்கள் ஏற்படும் சூழ்நிலையைத் தடுக்க சிங்கப்பூர் கடுமையாகப் போராடி வருகிறது.
“இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், கொவிட்-19 மரணங்களை நாம் சந்தித்துக்கொண்டிருந்தாலும், பொதுவாக கொவிட் பாதிப்பு அல்லாத ஆண்டுகளில் நிகழும் மரணங்களைவிட நாம் இனி அதிகமாகப் பார்க்க மாட்டோம்.
“மாறாக, கொவிட்-19க்கு அதிகமானோரை இழந்த பிறகே மற்ற நாடுகள் தற்போதைய நிலையை எட்டியுள்ளன,” என்றார் டாக்டர் ஜனில்.