இந்தோனீசியா, வியட்னாம், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளின் பயணிகளுக்கு வரும் வியாழக்கிழமை (நவம்பர் 11) முதல், எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
இந்த நாடுகளிலிருந்து வருவோர், சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட ஏஆர்டி பரிசோதனையில் தொற்று இல்லை என்ற சான்றைக் காண்பித்தால் போதுமானது.
‘ஆர்டி-பிசிஆர்’ சோதனை முடிவைக் காட்ட வேண்டும் என்று முன்பிருந்த விதிமுறைக்கு மாற்றாக இந்தப் புதிய முறை அமைகிறது.
கொவிட்-19 தொற்று அபாயம் அதிகம் உள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கத்தால் முன்பு கருதப்பட்ட 23 நாடுகளுக்கும் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
அந்தப் பட்டியலில் இந்தியா, லாவோஸ் போன்ற நாடுகள் இருந்தன.
இந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள், வரும் வியாழக்கிழமையில் இருந்து சிங்கப்பூர் வந்திறங்கியதும், அவர்களது இல்லத்தில் அல்லது அவர்களுக்கு விருப்பமான ஹோட்டலில் 10 நாள் தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.
தற்போது உள்ள விதிகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட ஓர் இடத்தில் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதற்கிடையே, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயணத்தடத் திட்டத்தில், இம்மாதம் 22ஆம் தேதியிலிருந்து சுவீடனும் ஃபின்லாந்தும் சேர்க்கப்படுகின்றன. சிங்கப்பூர் பயணிகளுக்கும் சுவீடனும் ஃபின்லாந்தும் அனுமதி வழங்கியுள்ளன.
அவற்றுடன், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயணத்தடத் திட்டத்தில் இப்போது மலேசியாவும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பதால், சிங்கப்பூருக்கு நாள்தோறும் வரும் பயணிகளின் வரம்பு 6,000க்கு உயர்த்தப்படுகிறது.
எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதைப் பற்றி பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், தடுப்பூசிப் பயணத்தடம் நம்பிக்கை அளித்துள்ளதால், மேலும் பல நாடுகளுக்கு அது விரிவுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.