சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நவம்பர் 29 முதல் விமானப் பயணம் மேற்கொள்ள லாம். அவர்கள் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை.
சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் கூட்ட றிக்கை ஒன்றில் நேற்று இதனை அறிவித்தனர்.
சாங்கி விமான நிலையத்திற்கும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயணத் திட்டம் தொடங்கும் என்று அந்தக் கூட்டறிக்கை தெரிவித்தது.
அந்த ஏற்பாட்டின்படி, விமானப் பயணம் மட்டுமே இப்போது அனுமதிக்கப்பட்டு உள்ளது. தரைவழிப் பயணங்கள் அந்தத் திட்டத்தில் இடம்பெறவில்லை.
என்றாலும் தரைவழிப் பயணத்தை விரைவில் மீண்டும் தொடங்குவது பற்றி இரு நாட்டு பிரதமர்களும் ஆர்வத்தோடு இருப்பதாக அறிக்கை கூறியது.
ஜோகூரிலும் சிங்கப்பூரிலும் நிலவும் பொதுச் சுகாதாரச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஜோகூர் கடற்பாலம், இரண்டாவது இணைப்புப் பாலம் வழியாக பயணம் மேற்கொள்ள இதேபோன்ற ஓர் ஏற்பாட்டை அமல்படுத்துவதன் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் விரிவான அளவில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவது பற்றி இரு தலைவர்களும் மகிழ்ச்சி அடைவதாகவும் அறிக்கை தெரிவித்தது.
இதனிடையே, இதுபற்றி ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த பிரதமர் லீ சியன் லூங், மக்களுக்குத் தடுப்பூசி போடுவதில் சிங்கப்பூரும் மலேசியாவும் நல்ல முன்னேற்றத்தைச் சாதித்து இருப்பதாகத் தெரிவித்தார்.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையில் எல்லை கடந்த பயணங்களைக் கட்டம் கட்டமாக தொடங்குவதற்கு இது தக்க தருணமாக இருக்கிறது என்றாரவர்.
இதன் மூலம் இரு நாட்டுப் பொருளியலுக்கும் புத்துயிர் கிடைக்கும். மக்களுக்கு இடையே யான உறவு மீண்டும் இடம்பெறும். இருதரப்பு உறவு பலமடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயண ஏற்பாட்டின்கீழ், சிங்கப்பூருக்கு வருபவர்கள் ஏழு நாள் தனிமை உத்தரவை நிறைவேற்றவேண்டிய தேவை இல்லை.
அதற்குப் பதிலாக சிங்கப்பூருக்குப் புறப்படும்போதும் இங்கு தரையிறங்கும்போதும் கொவிட்-19 பிசிஆர் பரிசோதனைக்கு அவர்கள் உட்பட வேண்டும்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் விமானப் பயண வசதி கிடைக்கவிருப்பதால் கொவிட்-19 காரணமாக பல மாத காலமாக பிரிந்தே இருக்கும் குடும்பத்தாரும் நண்பர்களும் சந்தித்து மகிழ வழி ஏற்படும். ஊழியர்கள் சிங்கப்பூர் வரவும் வழி ஏற்படும். தொழில்துறை உறவுகளும் மீண்டும் தொடங்கும்.
சிங்கப்பூர்-கோலாலம்பூர் விமானப் பயண வழித்தடம் உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பானவற்றுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாட்டு எல்லைகளும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டன.
அதற்கு முன் தரை எல்லைகளைக் கடந்து இரு தரப்புகளில் இருந்தும் அன்றாடம் ஏறத்தாழ அரை மில்லியன் மக்கள் சென்று வருவார்கள். எல்லைகள் மூடப்பட்டதை அடுத்து சிங்கப்பூரில் ஏறக்குறைய 100,000 மலேசியர்கள் நாடு திரும்ப முடியாமல் முடங்கி இருக்கிறார்கள் என்று கணக்கிடப்படுகிறது.