தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஐந்து நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வங்கக்கடலின் தென்கிழக்கில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. காலை 8.30 மணியளவில் அது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மையம் கொண்டிருந்தது.
தொடர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இன்று கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வகம் முன்னுரைத்து உள்ளது.
அதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கனமழையும் அதிகமழையும் பெய்யக்கூடும் என்றும் அது கூறியது. அதன் காரணமாக சென்னை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சாவூா், கடலூா், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு நேற்று அறிவிக்கப்பட்ட சிவப்பு வண்ண எச்சரிக்கை இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எட்டுப் பேர் வரை மரணமடைந்தனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (நவம்பர் 11) காலை முதல் தரைக்காற்று மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. எனவே, சென்னை மக்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர்க்குமாறும் தேவையான உணவுப்பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.
"மீட்புப் பணிகளுக்காக 53 படகுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்ற 570 'மோட்டார் பம்பு' களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்றார் அவர்.