கோலாலம்பூர்: ஜனவரி 1ஆம் தேதிக்குள் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மலேசியா அதன் எல்லைகளைத் திறந்துவிடும் என்று அந்நாட்டு அரசாங்க ஆலோசனை மன்றம் இன்று (நவம்பர் 11) தெரிவித்துள்ளது.
மலேசியாவில் கொவிட்-19 தொற்று குறைந்து வருகிறது. அதன் அடிப்படையில், அண்மைய வாரங்களாக பொருளியல் நடவடிக்கைகளை மலேசியா படிப்படியாகத் தொடங்கியுள்ளது.
மலேசிய மக்கள்தொகையில் முக்கால்வாசிக்கும் மேலானோர் கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக அரசாங்க புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்நிலையில், அரசாங்க ஆலோசனை மன்றத்துக்குத் தலைமை தாங்கும் மலேசிய முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின், இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
வெளிநாட்டினரின் வருகையின்றி, மலேசிய சுற்றுப்பயணத்துறை மிகவும் மெதுவாக மீட்சியடைவதாக அவர் கூறினார்.
வெளிநாட்டினரை மலேசியாவுக்குள் அனுமதிக்கும் அதேவேளையில், தொற்றுக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
அந்தந்த நாடுகளின் கொவிட்-19 நிலவரத்தைப் பொறுத்து, மலேசியாவுக்கு வெளிநாட்டினர் வருவதற்கான விதிமுறைகளை அதிகாரிகள் தீர்மானிப்பர் என்று திரு முகைதீன் சொன்னார்.
வெளிநாட்டுப் பயணிகளுக்கு எல்லைகளைத் திறந்துவிடுவதற்கான தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை. என்றாலும், சுகாதார மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் அதுகுறித்து கலந்தாலோசித்து வருவதாக திரு முகைதின் தெரிவித்தார்.