தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் (விடிஎல்) திட்டத்தை மலேசியா சிங்கப்பூருடன் இம்மாதம் 29ஆம் தேதிமுதல் தொடங்கவிருப்பதாக இவ்வாரம் அறிவிக்கப்பட்டது. இதனால் பயணம் செய்வோருக்கு இரு நாடுகளிலும் தனிமை உத்தரவு இருக்காது. இரு நாடுகளுக்கும் இடையே பயணங்களைத் தொடங்குவதன் முதல்படி இது என்று நேற்று நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் அஸ்ஃபார் முகம்மது முஸ்தஃபார் குறிப்பிட்டார்.
சுகாதாரம், பரிசோதனைத் திட்டம், எல்லை தாண்டிய செயல்முறைகள் போன்ற அம்சங்களில் இரு நாடுகளும் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், நிலம்வழியிலான எல்லைகளைத் திறப்பது 'விடிஎல்' திட்டத்தைக் காட்டிலும் சற்று சிக்கலானது என்றார் அவர்.
கொவிட்-19க்கு முந்திய காலகட்டத்தில் தினமும் 200,000 முதல் 300,000 பயணிகள் வரை இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்தனர். இதைத் தற்போதைய நிலையில் எதிர்பார்க்க முடியாது என்று அவர் எச்சரித்தார். ஒவ்வொரு நாளும் பயணிகள் எண்ணிக்கையில் ஒரு வரம்பு இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து மூலம் நிலம்வழிப் பயணங்கள் தொடங்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, எளிதில் சமாளிக்கக்கூடிய நிலை அது என்று அவர் பதிலளித்தார்.
இதற்கிடையே, அனைத்துலகப் பயணிகளுக்கு மலேசியா அதன் எல்லைகளை ஜனவரி 1ஆம் தேதிக்குள் திறந்திடும் என்று அந்நாட்டு அரசாங்க ஆலோசனை மன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நலிந்துபோன நாட்டின் சுற்றுப்பயணத்துறை மீளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியப் பொருளியல் மீட்சித் திட்டத்தைக் கையாளும் மன்றத்திற்கு முன்னாள் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் தலைவராக உள்ளார். கொவிட்-19 பரிசோதனைகள் போன்ற தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் எந்த நாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர் என்பதைப் பொறுத்து மலேசியாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றார் திரு முகைதீன்.