சிங்கப்பூரில் நேற்று வியாழக்கிழமை (11-11-2021) புதிதாக 2,396 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது. இது, அதற்கு முந்திய நாளைக் காட்டிலும் 1,085 குறைவு.
வாராந்திர நோய்ப்பெருக்கு விகிதம் 0.88லிருந்து 0.87ஆகக் குறைந்தது.
நோய்ப்பெருக்கு விகிதம் தொடர்ந்து ஒன்பது நாள்களாக ஒன்றுக்குக் கீழே பதிவாகி வந்துள்ளது.
இதற்கிடையே, 74 முதல் 100 வயதிற்குட்பட்ட மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்று காரணமாக மாண்டுவிட்டனர். இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 548ஆக உயர்ந்துவிட்டது.
நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் 2,243 பேர் சமூகத்தில் இருப்பவர்கள், 136 பேர் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள், 17 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
அவர்களுடன் சேர்த்து, சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 230,077 ஆனது.