கொவிட்-19க்கு எதிராக சிங்கப்பூர்வாசிகள் ‘முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட’ நிலை எப்போது காலாவதியாகும் என்பது பற்றி அரசாங்கம் மறுஆய்வு செய்யும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி குறித்த கூடுதல் தரவு கிடைக்கும்போது அந்த மறுஆய்வு இடம்பெறும்.
தற்போதைய விதிமுறைகளின்படி, இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட ஓராண்டு 14 நாள்கள் கழித்து, ஒருவரது தடுப்பூசி நிலை காலாவதியாகிறது.
இந்த விவகாரம் பற்றிய வாசகர் கடிதம் ஒன்று நேற்று முன்தினம் புதன்கிழமை (நவம்பர் 10) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் வெளியானது. அதில், ஒருவரது தடுப்பூசி நிலை எப்போது காலாவதியாகும் என்பது பற்றி சுகாதார அமைச்சு எப்படித் தீர்மானிக்கிறது என வாசகர் ஒருவர் கேட்டிருந்தார்.
அதற்கு சுகாதார அமைச்சு அனுப்பிய பதில் கடிதத்தில், கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கும் பாதுகாப்பு பற்றி சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் நடத்தப்படும் ஆய்வுகளைத் தான் அடிக்கடி கவனித்து வருவதாகக் கூறியது.
இதன் தொடர்பில் விவரித்த பொதுச் சுகாதாரக் குழுமத்துக்கான மருத்துவச் சேவை துணை இயக்குநர் டாக்டர் டேரிக் ஹெங், “முன்னதாக நாங்கள் விதிமுறைகளை இயற்றியபோது, தடுப்பூசி நிலை ஓராண்டுக்குச் செல்லுபடியாகும் என நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். தடுப்பூசி நிலை அடிப்படையில் வேறுபடுத்தப்பட்ட பாதுகாப்பு நிர்வாக நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட இது வகைசெய்யும்,” என்றார்.