சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) குழுமத்தின் கிட்டத்தட்ட அனைத்து விமானிகளும் விமானச் சிப்பந்திகளும் மீண்டும் வானில் பறக்கத் தொடங்கிவிட்டனர்.
விமானப் பயணத்துறை மீட்சியடைந்துவரும் வேளையில், தனது ஆற்றலை மேம்படுத்த எஸ்ஐஏ தயாராகி வருகிறது.
எஸ்ஐஏ விமானிகளில் 92 விழுக்காட்டினரும் விமானச் சிப்பந்திகளில் 86 விழுக்காட்டினரும் பணிக்குத் திரும்பிவிட்டதாக எஸ்ஐஏ தலைமை நிர்வாகி கோ சூன் போங் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கொவிட்-19க்கு முந்திய சூழலுடன் ஒப்பிடுகையில், எஸ்ஐஏ குழுமம் தற்போது 37 விழுக்காடு இயங்கி வருகிறது. டிசம்பரில் இது 43 விழுக்காடாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானச் சிப்பந்திகளில் பெரும்பாலானோர் குறைந்தது மாதத்திற்கு ஒருமுறை பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
மொத்தம் 135 எஸ்ஐஏ மற்றும் ஸ்கூட் விமானங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டன. எஸ்ஐஏ, ஸ்கூட் மொத்த விமான எண்ணிக்கையில் இது 79 விழுக்காடாகும்.
எஸ்ஐஏ விமானிகள், விமானச் சிப்பந்திகள் அனைவரும் கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக திரு கோ தெரிவித்தார். ஸ்கூட் விமானிகள், விமானச் சிப்பந்திகள் டிசம்பருக்குள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருப்பர்.