மலேசியாவில் நேற்று 6,517 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது அக்டோபர் மாதம் 22ஆம் தேதிக்குப் பிறகு பதிவான ஆக அதிகமான தொற்று எண்ணிக்கை ஆகும்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக 6,000க்கும் மேலான தொற்றுச் சம்பவங்கள் அங்கு பதிவாகியுள்ளன.
ஒவ்வொரு தொற்று சம்பவத்தாலும் சராசரியாக புதிதாக இன்னொரு தொற்று சம்பவம் நேற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து சராசரியாக வேறு எத்தனை பேர்க்குத் தொற்று பரவலாம் என்பதைக் குறிப்பிடும் 'ஆர்-நாட் (R0) மதிப்பு ஒன்றை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் இது 0.99 ஆக இருந்தது.
இதன்தொடர்பில், மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா, சில மாநிலங்களில் நோய்த்தொற்று விகிதம் உண்மையில் 1க்கு மேல் இருப்பதாக நேற்றைய ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஜூலை பிற்பகுதியில் இருந்து குறைந்து வந்த தொற்று விகிதம் அக்டோபர் 20ஆம் தேதி முதல் அதிகரிக்கத் தொடங்கியது.
மருத்துவமனை சேர்க்கையையும் மற்ற முக்கிய அறிகுறிகளையும் கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
தேசிய அளவில் கடந்த ஏழு நாள்களில் கிருமித்தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, அதற்கு முந்திய வாரத்தைக் காட்டிலும் 3.3% குறைந்தது. ஆனாலும், திரெங்கானு (33%), கோலாலம்பூர் (17%), நெகிரி செம்பிலான் (10%) ஆகிய வட்டாரங்களில் அது கூடியுள்ளது.
மலாக்காவிலும் சரவாக்கிலும் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி, மலேசியாவில் கிட்டத்தட்ட 75.7 விழுக்காட்டினர் முழுமையாகவும் 78.3 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு தடுப்பூசியேனும் போட்டுக்கொண்டுள்ளனர்.