கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டிராதோர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டால், $25,000 மருத்துவக் கட்டணத்தை எதிர்நோக்கக்கூடும். ஆனால், கட்டணக் கழிவு மற்றும் காப்புறுதி பொருந்தினால், மருத்துவக் கட்டணம் கணிசமாகக் குறையும் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவிலும் கொவிட்-19 தொடர்பாக இதர சிகிச்சையும் தேவைப்படுவோருக்கான இடைநிலை மருத்துவமனைக் கட்டணம் $25,000. அரசாங்க மானியம், மெடிஷீல்டு லைஃப் காப்புறுதி மூலம், தகுதியுடைய சிங்கப்பூரர்களுக்குக் கட்டணம் $2,000 முதல் $4,000ஆகக் குறையும்.
தங்களது மெடிசேவ் கணக்கிலிருந்து எஞ்சிய தொகையை நோயாளிகள் செலுத்தலாம்.
நோயாளியின் மருத்துவ நிலையின் தீவிரத்தையும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் இடத்தையும் பொறுத்து, மருத்துவக் கட்டணம் வேறுபடும் என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சொன்னார்.
தடுப்பூசி போட்டிராதோரை கொவிட்-19 தொற்றினால், டிசம்பர் 8ஆம் தேதியிலிருந்து மருத்துவக் கட்டணத்தை அவர்களே ஏற்க வேண்டும் என்று அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதிபெற்றும், தடுப்பூசி விரும்பாதோரே, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் கொவிட்-19 நோயாளிகளில் பெரும்பகுதியினராக உள்ளனர். ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டோர், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள அவகாசம் வழங்கும் நோக்கில், டிசம்பர் 31ஆம் தேதிவரை அவர்களுக்கு மருத்துவமனைக் கட்டணம் விதிக்கப்படாது.

