கொவிட்-19 தொற்றால் நேற்று வெள்ளிக்கிழமை (12-11-2021) 35 முதல் 102 வயதிற்கு இடைப்பட்ட மேலும் 14 பேர் மாண்டுவிட்டனர். இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 562 ஆனது.
அந்த 35 வயதானவர் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கவில்லை என்றும் அவருக்கு வேறு பல உடல்நலக் கோளாறுகளும் இருந்தன என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அதேபோல, மாண்டோரில் தடுப்பூசி போடாத ஒருவரைத் தவிர மற்ற அனைவர்க்கும் வேறு உடல்நலக் குறைபாடுகள் இருந்ததாகவும் கூறப்பட்டது.
சமூகத்தில் 2,965 பேர், வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் 128 பேர், வெளிநாட்டில் இருந்து வந்த அறுவர் என மேலும் 3,099 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் 0.87ஆக இருந்த வாராந்திர நோய்ப்பெருக்கு விகிதம் நேற்று 1.04ஆக உயர்ந்தது.
கடந்த ஏழு நாள்களிலும் அதற்கு முந்திய ஏழு நாள்களிலும் பதிவான தொற்று பாதிப்புகளுக்கு இடையிலான விகிதத்தை இது குறிப்பிடுகிறது.
“சென்ற வாரம் தீபாவளித் திருநாள் பொது விடுமுறையின்போது குறைவான பாதிப்புகள் பதிவானதே வாராந்திர நோய்ப்பெருக்கு விகித அதிகரிப்பிற்குக் காரணம்,” என்று அமைச்சு விளக்கமளித்தது.
தீபாவளிப் பொது விடுமுறையின்போது பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களிலும் பலதுறை மருந்தகங்களிலும் குறைவான எண்ணிக்கையில் சளி மாதிரிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறியப்படுகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.