வழக்கம்போல் விமானங்களை இயக்கத் தயாராகிறது இந்தியா

வழக்கம்போல் விமானங்களை இயக்கத் தயாராகிறது இந்தியா

1 mins read
553e65e8-e77f-4b59-984a-4773eccb43a2
-

வழக்கம்போல் விமானங்களை (scheduled flights) இயக்கும் நடைமுறையை மீண்டும் தொடங்குவதற்கான பணிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்றுவரும் மாபெரும் 'எக்ஸ்போ 2020' கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்தியக் காட்சிக்கூடத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சனிக்கிழமை வருகைபுரிந்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வழக்கமான விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்புவதை நோக்கிய நடவடிக்கை அது," என்று சொன்னார்.

இதனிடையே, அனைத்துலகப் பயணிகளுக்கு இந்தியா புதிய வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

அண்மைய பயண ஆலோசனைக்குறிப்பின்படி, ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, புறப்பாட்டிற்கு முன்னரும் வருகைக்குப் பின்னரும் எடுக்கப்பட வேண்டிய கொவிட்-19 பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விமான நிலையத்தில் இறங்கும்போது அல்லது இல்லத் தனிமைக் காலத்தின்போது கொவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தால், அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.