எழுபது மீட்டர் உயரத்தில் பாரந்தூக்கியில் சிக்கிக்கொண்டிருந்த ஊழியரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பாதுகாப்பாக மீட்டு உள்ளது. பீச் ரோட்டில் உள்ள கட்டு மானத் தளத்தில் வெள்ளிக்கிழமை மாலை 8.45 மணியளவில் பாரந்தூக்கியில் ஊழியர் ஒருவர் சிக்கிக் கொண்டார். காலில் காயமடைந்ததால் அவரால் கீழே இறங்க முடியவில்லை.
தகவலறிந்து அங்கு வந்த குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவ உதவி பயிற்சி பெற்றவர் உட்பட இரண்டு தீ அணைப்பாளர்கள் பாரந்தூக்கியில் ஏறி உச்சத்தை அடைந்தனர். ஊழியரின் காலில் கட்டுப்போட்டு ஊழியரை அசையாமல் படுக்க வைத்தனர்.
பின்னர் பேரிடர் உதவி, மீட்புக்குழுவினர் மேலே ஏறி ஊழியரை தூக்குப்படுக்கையில் வைத்து அந்தரத்தில் தொங்கியபடி அவரைக் கீழே இறக்கினர். சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் ஊழியர் சேர்க்கப்பட்டார். ஊழியர் எப்படி காயம் அடைந்தார் என்பது குறித்து விவரமில்லை.

