உடற்பருமன், உடற்பயிற்சியின்மைக்கு இன்னும் தீர்வில்லை: ஓங்
நீரிழிவுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் கணிசமான முன்னேற்றம் கண்டு வந்தபோதிலும் உடற்பருமன் மற்றும் குறைவான நடமாட்டம் போன்றவை இன்னும் தீராத பிரச்சினைகளாக நீடிப்
பதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் எல்லாப் பிரிவினரிடத்திலும் காணப்படும் உடற்பருமன் 2017ஆம் ஆண்டில் 8.6 விழுக்காடாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு அது 10.5 விழுக்காடாக அதிகரித்துவிட்டது என்றார் அவர்.
சிங்கப்பூரர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 12 தேக்
கரண்டி சர்க்கரை உட்கொள்ளு
வதாகவும் ஆரோக்கிய அளவைக் காட்டிலும் இது மிகவும் அதிகம் என்றும் 2018/2019 தேசிய ஊட்டச் சத்துணவு ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி திரு ஓங் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாள் வெளியிட்ட தகவல்படி, ஆண்டுதோறும் சுமார் 19,000 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணியில் உரையாற்றியபோது நீரிழிவுக்கு எதிரான போராட்டம் சிங்கப்பூரின் எதிர்கால நலனை நோக்கிய நீண்டகாலப் பிரச்சினை என்று கூறியிருந்தார்.
திரு ஓங் நேற்று பேசும்போது சிங்கப்பூரரின் வாழ்க்கைப்பாணியில் கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகக் கூறினார்.
"சில சிங்கப்பூரர்கள் சமூக நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்கள், மேலும் சிலரது வாழ்க்கை நடைமுறை அதிக உடலுழைப்பு இல்லாததாக மாறிவிட்டது.
"இந்தப் போக்கு நீரிழிவுக்கு எதிரான நமது போராட்டத்தில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தக்கூடியது. மேலும், ஏற்கெனவே நாம் கண்ட பலனை மாற்றி
யமைக்கக்கூடியதாக உள்ளது.
"இதில் மேலும் ஒரு சிக்கலாக கொவிட்-19 வந்துள்ளது. நோய்த்தொற்றுடன் வாழவேண்டிய நிலை உள்ளதால் நீரிழிவை முறியடிப்
பதில் சுணக்கம் ஏற்படக்கூடும்," என்றார் அமைச்சர் ஓங்.
உலக நீரிழிவு தினத்தையொட்டி 'சிங்கப்பூர் நீரிழிவு' என்னும் அறநிறுவன அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய திரு ஓங், நீரிழிவு நோய் உள்ளோர் கொவிட்-19 நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாகக் குறிப்பிட்டார்.

