சிங்கப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 14) 1,723 பேருக்குப் புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
சனிக்கிழமை பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் இது குறைவு. அன்றைய தினம் 2,304 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை பதிவான எண்ணிக்கையில் 1,651 பேருக்கு சமூக அளவில் பரவியது. 66 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய ஆறு பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
கொவிட்-19 வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதமும் சற்று குறைந்துள்ளது.
சனிக்கிழமை 0.98ஆக இருந்த அந்த விகிதம், மறுநாள் 0.97ஆகக் குறைந்ததாக சுகாதார அமைச்சு தனது அன்றாட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் பதிவாகும் தொற்று எண்ணிக்கையை, அதற்கு முந்திய வாரத்துடன் ஒப்பிட்டு இந்த வளர்ச்சி விகிதம் கணக்கிடப்படுகிறது. இந்த விகிதம் 1க்குேமல் இருந்தால், தொற்று அதிகரித்து வருவதாகப் பொருள்.
ஆனால், அந்த விகிதம் தொடர்ந்து 1க்குக்கீழ் பதிவாகி வருவது சிங்கப்பூரின் கொவிட்-19 தொற்று சரிந்து வருவதைக் குறிக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 1க்குமேல் அது சென்றது.
கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்தோர் தொடர்பான தகவலையும் அமைச்சு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
அன்றைய தினம் பத்துப் பேர் மாண்டதாகவும் அவர்கள் 60 வயதுக்கும் 96 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் உயிரிழந்த அனைவருக்கும் கொவிட்-19 தொடர்பிலான இதர உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் அது கூறியுள்ளது.
அவர்களுக்கு வெவ்வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சு, அதுபற்றி விவரிக்கவில்லை.
புதிதாகப் பதிவான மரண எண்ணிக்கையையும் சேர்த்து, சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 586க்கு அதிகரித்துள்ளது.
அதேபோல, இங்கு ஞாயிறு வரைப் பதிவாகி உள்ள தொற்று எண்ணிக்கை 237,203க்குச் சென்றது.