நவம்பர் 29ஆம் தேதியிலிருந்து இந்தியா, இந்தோனீசியா உள்ளிட்ட மேலும் சில நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் இங்கு தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
மேலும், டிசம்பர் 6 முதல் கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய நாடுகளிலிருந்தும் சிங்கப்பூர் வரும் பயணிகள், இங்கு வந்திறங்கியதும் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
மேற்கூறப்பட்ட இந்த நாடுகளுடன் தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தை (Vaccinated Travel Lane) சிங்கப்பூர் தொடங்குகிறது.
இந்தத் திட்டம் குறித்த மேல்விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 15) தெரிவித்தது.
சிங்கப்பூர், தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் தொடங்கியுள்ள ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கொவிட்-19 நிலவரத்தை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் சுகாதார அமைச்சும் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் தேவை ஏற்பட்டால் பயண நடைமுறைகள் மாற்றியமைக்கப்படும் என்றும் ஆணையம் கூறியது.
இத்தகைய ஏற்பாட்டின்கீழ் உள்ள அந்தந்த நாடுகளின் நிபந்தனைகளைச் சரிபார்த்துக்கொள்ளும்படி பயணிகளுக்கு ஆணையம் ஆலோசனை கூறியது.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு இன்று மாலை செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. அதில் பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், மேற்கூறப்பட்ட இந்த நாடுகளுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே கொவிட்-19 சூழலுக்கு முன்பு அதிக போக்குவரத்து இருந்ததைச் சுட்டினார்.
எடுத்துக்காட்டாக, 2019ல் சாங்கி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய மொத்த பயணிகள் எண்ணிக்கையில், இந்தியா 7 விழுக்காடு அங்கம் வகித்தது.
கொவிட்-19 தொற்று அபாயத்தைப் பொறுத்தவரை, இந்தியா, இந்தோனீசியா, கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் உள்ளிட்ட நாடுகள் இரண்டாம் பிரிவில் உள்ளன.